Ad Widget

யாழில் ஐஸ் போதைப்பொருள் ஆய்வுகூடம் சுற்றிவளைப்பு – இருவர் கைது

சுன்னாகம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட இணுவில் பகுதியில் ஐஸ் போதைப்பொருள் உற்பத்தி நிலையம் ஒன்று அதிரடியாக சுற்றிவளைக்கப்பட்டது. இதன்போது இரண்டு சந்தேகநபர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

யாழ்ப்பாணம் மாவட்ட பொலிஸ் குற்றத்தடுப்பு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில், அவர்களால் இந்த சுற்றிவளைப்பு நடவடிக்கை ஞாயிற்றுக்கிழமை (12) முன்னெடுக்கப்பட்டது. இதன்போது ஐஸ் போதைப்பொருள் உற்பத்தி செய்வதற்கு பயன்படும் பொருட்களும் மீட்கப்பட்டுள்ளன.

கைதுசெய்யப்பட்ட சந்தேகநபர்கள் இருவரும் யாழ்ப்பாணம் மாவட்ட பொலிஸ் குற்றத்தடுப்பு பிரிவினரின் கண்காணிப்பில் உள்ளனர்.

குறித்த வீடானது ஐஸ் போதைப்பொருள் உற்பத்தி செய்யும் ஆய்வுகூடமாக செயற்பட்டு வந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில் வீடானது சீல் வைக்கப்பட்டுள்ளதுடன் கொழும்பில் இருந்து இரசாயன பகுப்பாய்வாளர்களை வரவழைத்து பகுப்பாய்வு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன.

பிரதான சந்தேக நபர் தப்பியோடியுள்ள நிலையில் அங்கு பணிபுரியும் இருவர் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Posts