முள்ளிவாய்க்காலில் சிவாஜிலிங்கம் சத்தியப்பிரமாணம்!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வட மாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் இன்று திங்கட்கிழமை முள்ளிவாய்க்காலில் சத்தியப்பிரமாணம் செய்துள்ளார்.

sivajilingam_tna_mp

வட மாகாண சபைக்கு தெரிவுசெய்யப்பட்ட தமிழ்த் தேசிய கூட்டமைப்பு உறுப்பினர்களின் சத்தியப்பிரமாண நிகழ்வு கடந்த வெள்ளிக்கிழமை யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது. இந்த நிகழ்வினை அக்கட்சியின் ஒன்பது உறுப்பினர்கள் புறக்கணித்தனர்.

குறித்த உறுப்பினர்களின் சத்தியப்பிரமாண நிகழ்வு இன்று திங்கட்கிழமை முள்ளிவாய்க்காலில் நடைபெறவிருந்தது. எனினும் மன்னார் ஆயர் இராயப்பு ஜோசப்பின் தலையீட்டினை அடுத்து சத்தியப்பிரமாண நிகழ்வு கைவிடப்பட்டுள்ளது.

வடமாகாண சபை உறுப்பினர் எம்.கே. சிவாஜிலிங்கம் முள்ளியவாய்க்கால் சேதமடைந்த பொது நோக்கு மண்டபத்திற்கு முன்னால் இன்று காலை 10.30 மணிக்கு பதவிப்பிரமாணம் செய்து கொண்டார்.

தனது கட்சி ஆதரவாளர்களுடன் இன்று காலை முல்லைத்தீவுக்குச் சென்ற சிவாஜிலிங்கம் வைத்திய கலாநிதி கே. மயிலேறும்பெருமாள் முன்னிலையில் வடமாகாணசபை உறுப்பினராக பதவிப்பிரமாணத்தை செய்து கொண்டார்.

இது தொடர்பில் சிவாஜிலிங்கம் தெரிவிக்கையில்,

வடமாகாணசபையை நான் எதிர்க்கவில்லை. வடமாகாணசபையில் அமைச்சு நியமனம் தொடர்பில் தமிழரசுக் கட்சி எடுத்த தன்னிச்சையான தீர்மானங்களை எதிர்த்தே முதலமைச்சர் முன்னிலையில் இடம்பெற்ற பதவிப்பிரமாணத்தை புறக்கணித்தேன்.

இன்று மக்கள் எனக்கு வழங்கிய ஆணையை மதித்து முள்ளியவாய்க்காலில் பதவிப்பிரமாணம் செய்துள்ளேன். எமது மக்களின் விடிவுக்காக போராடிய 50,000 மாவீரர்களினதும் யுத்தத்தின் போது இறந்த மக்களினதும் அர்ப்பணிப்புக்களினாலும் தியாகங்களினாலுமே நாம் இன்று இந்த வெற்றியைப் பெற்றோம். சர்வதேசம் இன்று எம் மீது கவனம் செலுத்துவதற்கும் இதுவே காரணமாகும்.

எனவே மக்கள் எமக்கு வழங்கிய ஆணையை பயன்படுத்தி சிறிலங்கா அரசுக்கு எமது பிரச்சனையை தீர்க்குமாறு அழுத்தம் கொடுப்பேன். மாறாக சிறிலங்கா அரசு இது தொடர்பில் கவனம் செலுத்தாத பட்சத்தில் சர்வதேசத்திடம் முறையிட்டு ஜக்கியநாடுகள் ஸ்தாபனம் ஊடாக தீர்வைப் பெற முயற்சிப்பேன் எனவும் முள்ளியவாய்கால் மண்ணில் உறுதிமொழி எடுத்துக் கொண்டதாகவும் அவர் தெரிவித்தார்.

தொடர்புடைய செய்திகள்

முள்ளிவாய்க்கால் சத்தியப்பிரமாண நிகழ்வு இடைநிறுத்தம்

விடுதலைப் போரட்டத்தைக் கேவலப்படுத்தவா முள்ளிவாய்க்கால் பதவிப்பிரமாணம்? – முல்லை மக்கள் கேள்வி