கரணவாய் தெற்கு முதலைக்குழி கிராமத்துக்கான நன்னீர் விநியோகத்திட்டத்தை வடமாகாண நீர்வழங்கல் மற்றும் நீர்ப்பாசனத்துறை அமைச்சர் பொ.ஐங்கரநேசன் நேற்று செவ்வாய்க்கிழமை (03.02.2015) ஆரம்பித்துவைத்துள்ளார்.
வடமராட்சி தெற்கு மேற்கு பிரதேசசபை எல்லைக்கு உட்பட்ட கரணவாய் தெற்கு முதலைக்குழியில் கிணற்று நீர் உவர்ப்புத்தன்மையுள்ளதாக இருப்பதால் இங்கு வாழும் மக்கள் குடிநீரைப் பெறுவதில் பெரும் சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.வடமாகாணநீர்வழங்கல் மற்றும் நீர்ப்பாசனத்துறைகளுக்குப் பொறுப்பான அமைச்சர் பொ.ஐங்கரநேசனின் கவனத்துக்கு இது கொண்டு செல்லப்பட்டதையடுத்து முதலைக்குழிக்கான நீர்விநியோகத்திட்டம் இப்போது ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.
முதலைக்குழியில் வாழும் 350 குடும்பங்கள் பயன்பெறக்கூடியதாக 1600 மீற்றர் தூரத்துக்கு நீரை விநியோகிக்கும் வகையில் 18 நீர்க் குழாய்களைக் கொண்டதாக இத்திட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதற்கு 3 மில்லியன் ரூபா செலவிடப்பட்டுள்ளது. இத்தொகையை அமைச்சர் பொ. ஐங்கரநேசனின் பரிந்துரையின்பேரில் வடக்கு முதல்வர் க.வி. விக்னேஸ்வரன் தனது அமைச்சுக்குரிய மாகாண குறித்தொதுக்கப்பட் அபிவிருத்தி நிதியில் இருந்து ஒதுக்கீடு செய்து கொடுத்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வடமராட்சி தெற்கு மேற்கு பிரதேச சபைத் தவிசாளர் பொ.வியாகேசு தலைமையில் நடைபெற்ற முதலைக்குழி நீர் விநியோகத்திட்ட ஆரம்ப நிகழ்ச்சியில் வடக்கு மாகாணசபை உறுப்பினர்கள் ச. சுகிர்தன், வே. சிவயோகன், வடமாகாண விவசாய அமைச்சின் செயலாளர் இ. வரதீஸ்வரன்,வடமராட்சி தெற்கு மேற்கு பிரதேசச் செயலாளர் எஸ். சிவசிறீ ஆகியோரும் கலந்துகொண்டிருந்தார்கள்.