Ad Widget

மீற்றர் வட்டி மாபியாக்கள் யாழில் அதிகரிப்பு! பொதுமக்கள் உதவியை நாடும் பொலிஸார்!!

வட்டிக்கு பணம் வழங்கி , சொத்துக்களை பறிமுதல் செய்யும் மாபியாக்கள் யாழில் அதிகரித்து உள்ளதாகவும் , அவர்கள் தொடர்பில் தகவல்கள் தெரிந்தவர்களோ, அவர்களால் பாதிக்கப்பட்டவர்களோ தன்னிடம் நேரடியாக முறைப்பாடு செய்ய முடியும் என யாழ்.மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஜெகத் நிஷாந்த தெரிவித்துள்ளார்.

அது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,

அதீத வட்டி , மீற்றர் வட்டி என்பவற்றுக்கு பெருந்தொகை பணங்களை வழங்கி , அந்த பணத்தினை வாங்கியவர்கள் மீள செலுத்த முடியாதபோது, அவர்களிடம் இருந்து சட்டவிரோதமான முறையில் சொத்துக்களை பறிமுதல் செய்யும் சம்பவங்கள் தொடர்பில் எமக்கு தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளன.

இது தொடர்பில் பாதிக்கப்பட்டவர்கள் உரிய முறையில் முறைப்பாடுகள் செய்ய தயங்குவதால் , பொலிஸாரினால் மேலதிக நடவடிக்கை எடுக்க முடியாத நிலைமை காணப்படுகிறது.

யாழ்ப்பாணத்தில் தற்போது “மீற்றர் வட்டி” மாபியாக்கள் அதிகரித்துள்ளன. எனவே பாதிக்கப்பட்டவர்கள் துணிந்து முறைப்பாடு செய்தால், அவர்களுக்கு எதிராக நடவடிக்கைகளை எடுப்போம் என மேலும் தெரிவித்தார்.

அதேவேளை யாழில் கடன் தொல்லைகளால் உயிர்மாய்த்த பலரின் உயிர் மாய்ப்புக்கு இந்த மீற்றர் வட்டி மாபியாக்களே காரணம் என உயிர்மாய்த்தவர்களின் உறவுகள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Posts