மன்னார் மறைமாவட்டத்தின் புதிய ஆயராக ஓய்வு பெற்ற ஆயர் கிங்ஸ்லி சுவாமிப்பிள்ளை நியமிக்கப்பட்டுள்ளார். ஆயர் அதிவணக்கத்துக்குரிய இராயப்பு ஜோசப் ஆண்டகையின் பதவி துறப்பை திருத்தந்தை பிரான்சிஸ் ஏற்றுக்கொண்டுள்ள நிலையில் அவர் நியமிக்கப்பட்டுள்ளார் என்று மன்னார் மறைமாவட்ட குரு முதல்வர் அருட்தந்தை அன்ரனி விக்டர் சூசை தெரிவித்தார்.
மன்னார் மறைமாவட்டத்தின் புதிய அப்போஸ்தலிக்க பரிபாலகர் நியமனம் தொடர்பாக நேற்று (14) மாலை 4.30 மணியளவில் மன்னார் ஆயர் இல்லத்தில் இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனை தெரிவித்தார்.
மேலும், திருச்சபைச் சட்ட எண் 401 பகுதி ஒன்றுக்கு அமைவாக மன்னார் ஆயர் இராயப்பு ஜோசப் ஆண்டகையின் பதவி துறப்பை திருத்தந்தை பிரான்சிஸ் ஏற்றுக்கொண்டுள்ளார் என்பதனை இலங்கைக்கான அப்போஸ்தலிக்க தூதுவர் அறிவித்துள்ளார்.
அந்த வகையில் மன்னார் மறைமாவட்டத்திற்கு புதிய ஆயர் நியமிக்கப்பட்டு பொறுப்பை ஏற்கும் வரை திருத்தந்தை பிரான்சிஸ் திருகோணமலை மறைமாவட்டத்தின் இளைப்பாறிய ஆயர் ஜோசப் கிங்ஸ்லி சுவாமிப்பிள்ளை ஆண்டகை மன்னார் மறைமாவட்டத்தின் அப்போஸ்தலிக்க பரிபாலகராக நியமித்துள்ளார். இந்த நியமனம் நேற்று மாலை 4.30 மணியில் இருந்து அமுலுக்கு வரும் என்று அவர் மேலும் தெரிவித்தார்.