கொடிகாமம் பொலிஸ் நிலையத்துக்குட்பட்ட பிரதேசங்களில் 2013ஆண்டை விட, 2014ஆம் ஆண்டு, 25 சதவீதம் விபத்துக்கள் அதிகரித்துக் காணப்பட்டிருந்தது. இதற்கான முக்கிய காரணமாக மதுபோதையில் வாகனம் செலுத்துகின்றமையே என கொடிகாமம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி டி.எம்.சிந்தக்க.என்.பண்டார, ஞாயிற்றுக்கிழமை (05) தெரிவித்தார்.
இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், 2014ஆம் ஆண்டு 5 பேர் விபத்துக்களினால் இறந்துள்ளதுடன், 14 பேர் படுகாயங்களுக்குள்ளானார்கள், 16 பேருக்கு சிறு காயங்கள் ஏற்பட்டுள்ளன.
பாதசாரியின் கவனயீனத்தால், 1, துவிச்சக்கரவண்டி செலுத்திய இருவர் போக்குவரத்து விதிமுறைகளினை மீறியதினால் 2, சாரதியின் கவனயீனத்தால் வாகனம் மோதி 2 உயிரிழப்புக்களும் இடம்பெற்றிருந்தன.
கடந்த 30 வருடமாக இடம்பெற்றிருந்த உள்நாட்டு யுத்தம் காரணமாக, பொதுமக்களுக்கும் பொலிஸாருக்கும் இடையிலான தொடர்பு குறைவாக காணப்பட்டிருந்தது. போக்குவரத்து பொலிஸார், வீதிக்கடமைகளில் ஈடுபட முடியாதவாறு வடமாகாணத்தில் அச்சமான சூழ்நிலை காணப்பட்டது.
தற்போது யுத்தம் முடிவடைந்து வாகனப் போக்குவரத்துக்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளன. இளைஞர்களிடத்தில், மது அருந்தும் பழக்கமும் அதிகரித்துள்ளது. 20 – 35 வயதுக்கு இடைப்பட்ட இளஞர்களே அதிகம் மது அருந்தி விட்டு வாகனம் செலுத்துகின்றனர்.
மது அருந்தி விட்டு போக்குவரத்து விதிமுறைகளை மீறுவதுடன், முறைப்படி வீதியில் பயணிப்பவர்கள் மீது மோதி விபத்தையும் ஏற்படுத்துகின்றனர்.
மதுபானம் அருந்தி வாகனங்களை செலுத்துபவர்களின் செயற்பாட்டால் வீதி ஒழுங்கு விதிமுறைகளை சரியான முறையில் பின்பற்றுவர்களும் உயிரிழக்கும் சம்பவங்களும் இடம்பெறுகின்றன.
ஏ – 9 நெடுஞ்சாலை என்பது வாகனங்கள் தினமும் இடைவிடாது பயணிக்கும் சாலை என்பதினால், போக்குவரத்து பொலிஸார் மீசாலையில் இருந்து எழுதுமட்டுவாள் பகுதி வரை 24 மணிநேரம் வீதி ரோந்து கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
எனினும் பாதசாரிகள், வாகன சாரதிகளின் கவனயீனத்தால் திடீர் விபத்துக்கள் இடம்பெறுவதனை கட்டுப்படுத்த முடியாமல் போகின்றது. வாகனத்தை கட்டுப்படுத்தி ஒடும் விதிமுறை குறைவாகவே காணப்படுகிறது. அதிக வேகத்தில் வாகனத்தை செலுத்தி விபத்துக்களை தேடிக்கொள்கின்றனர்.
இந்த வருடம் (2015) போக்குவரத்து விபத்துக்களை கட்டுப்படுத்தும் வகையில், உதவி பொலிஸ் அத்தியட்சகரின் வழிகாட்டலில் 27 கிராமஅலுவலர் பிரிவுகளிலும் 15 நாட்களுக்கு ஒரு முறை, போக்குவரத்து விதிமுறை தொடர்பான கருத்தரங்கை செய்யவுள்ளோம்.
பாடசாலை மட்டத்திலும் போக்குவரத்து விதிமுறை தொடர்பான செயலமர்வை ஒவ்வொரு திங்கட்கிழமையும் முன்னெடுக்க பாடசாலைகளின் அதிபர்களின் ஒத்துழைப்பும் பெறப்பட்டுள்ளது என்றார்.