Ad Widget

புலிகளின் புதையலை தோண்ட முற்பட்டோருக்கு தடுப்புக் காவல்

பருத்தித்துறை, மணற்காடு பகுதியில் கடந்த 30 வருடங்களுக்கு முன்னர் அரச தொல்பொருள் திணைக்களத்துக்குரிய இடத்தில் புதைக்கப்பட்டதாகக் கூறப்படும் பெருந்தொகையான நகைகள் மற்றும் பணம் என்பவற்றைத் தோண்ட முற்பட்ட பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த நால்வரையும் 72 மணித்தியாலங்கள் பொலிஸ் காவலில் தடுத்து வைத்து விசாரிப்பதற்கு பருத்தித்துறை நீதவான் நீதிமன்ற நீதவான் மாணிக்கவாசகர் கணேசராஜா, ஞாயிற்றுக்கிழமை (22) அனுமதி வழங்கினார்.

இவர்கள் கடந்த 20ஆம் திகதி நெல்லியடி பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர்.

சந்தேகநபர்களிடம் மேற்கொண்ட விசாரணைகளில் காங்கேசன்துறை பொலிஸ் பிராந்தியத்தில் கடமையாற்றும் பொலிஸ் அதிகாரிகளுக்கு தொடர்புள்ளமை தெரியவந்துள்ளது.

மேலும், கொழும்பில் உள்ள ஓய்வு பெற்ற பிரதம பொலிஸ் பரிசோதகர், புதுக்கடை நீதவான் நீதிமன்ற சட்டத்தரணி மற்றும் நடிகையொருவருக்கும் தொடர்புள்ளமை பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

விடுதலைப்புலிகளின் காலத்தில் யாழ்ப்பாணத்தில் கடமையாற்றிய பொலிஸ் அதிகாரிகளே இவ்விடயம் குறித்து தெரியப்படுத்தியிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

பொலிஸ் மா அதிபர் என்.கே.இலங்ககோனின் பணிப்புரைக்கு அமைய விசாரணைகளை மேற்கொண்டு வரும் வட மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர், சம்பவம் தொடர்பில் பூரண விசாரணைகளை மேற்கொள்ளுமாறு காங்கேசன்துறை பொலிஸ் அத்தியட்சகருக்கு உத்தரவிட்டுள்ளார்.

இச்சம்பவம் தொடர்பில் உயர் பொலிஸ் அதிகாரிகள் பரிபூரண விசாரணைகளின் பின் கைது செய்யப்படக்கூடும் என பொலிஸ் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

Related Posts