யாழ். பல்கலைக்கழக மருதனார்மட நுண்கலைப் பீடத்தின் வரைதலும் வடிவமைத்தலும் மாணவர்கள் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து மூன்றாவது முறையாக செவ்வாய்க்கிழமை (31) வகுப்புக்களைப் புறக்கணித்து போராட்டம் நடத்தினர்.
தங்கள் கோரிக்கைகள் நிறைவேறும் வரையில் தொடர்ந்தும் இந்தப் போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாக அவர்கள் கூறினர்.
மருதனார்மடத்தில் உள்ள நுண்கலைப் பீடத்தில் கல்வி கற்கும் மாணவர்களுக்கான பரீட்சைகள் கடந்த காலத்தில் சீராக நடைபெறவில்லை, ஏனைய பீடங்களுக்கு பரீட்சைகள் முடிவுற்றுள்ள போதிலும் நுண்கலைப் பீடத்தில் வரைதலும் வடிவமைத்தலும் துறைக்கு பரீட்சைகள் நடைபெறவில்லை, மற்றும் தமது துறைக்கான இணைப்பாளரை நியமனம் செய்யவில்லை போன்ற குறைகளை நிவர்த்தி செய்யக் கோரி இந்த அடையாள வகுப்பு பகிஸ்கரிப்பை நடத்தினர்.
கடந்த 16 ஆம் திகதியும் இவர்கள் தமது கோரிக்கைகளை முன்வைத்து போராடியபோது, அவர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என பல்கலைக்கழக நிர்வாகம் வழங்கிய உறுதிமொழியை அடுத்து தமது போராட்டத்தைக் கைவிட்டனர். 2 வாரங்கள் ஆகியும் தங்களின் கோரிக்கைகள் எதுவும் இதுவரையில் நிறைவேற்றப்படவில்லை எனக்கூறி மாணவர்கள் மீண்டும் கடந்த 26ஆம் திகதி முகங்களில் பல வடிவங்களை வரைந்து போராட்டம் நடத்தினர்.
தங்கள் கோரிக்கைகளை பல்கலைக்கழக நிர்வாகம் தொடர்ந்தும் அலட்சியம் செய்து வருவதையடுத்து, அவர்கள் இன்று (31) மூன்றாவது முறையாக போராட்டத்தில் இறங்கியுள்ளதுடன், இந்தப் போராட்டத்தை தொடர்ந்து மேற்கொள்ளவுள்ளதாகக்கூறினர்.