Ad Widget

நிலையான நல்லிணக்கத்திற்கான அரசின் அர்ப்பணிப்பு தெளிவானது! – சமந்தா

“இலங்கையில் நிலையான நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கு கடந்த 10 மாதங்களுக்குள் புதிய அரசு மேற்கொண்ட அர்ப்பணிப்பு தெளிவானது.” – இவ்வாறு இலங்கை வந்துள்ள ஐக்கிய நாடுகளுக்கான அமெரிக்க தூதுவர் திருமதி சமந்தா பவர் நேற்று திங்கட்கிழமை முற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவைச் சந்தித்தபோது கூறினார் என்று ஜனாதிபதி ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

samantha

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் இந்தச் சந்திப்பில் பங்கேற்றார் என்று ஜனாதிபதி ஊடகப் பிரிவின் செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

இந்தச் சந்திப்பு தொடர்பில் அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளவை வருமாறு:-

நல்லிணக்க வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்தும்போது புதிய அரசு மிகுந்த நம்பிக்கையுடனும் ஏற்றுக்கொள்ளக்கூடியவாறும் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாகக் குறிப்பிட்ட சமந்தா பவர், இவ்வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்தும் உத்தியோகத்தர்களுக்கும் நிறுவனங்களுக்குமிடையிலான உறவு மேலும் விரிவுபடுத்தப்பட முடியுமாயின் சிறந்தது எனச் சுட்டிக் காட்டினார்.

நாட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் புதிய சீர்திருத்தங்களை தான் பாராட்டுவதாக குறிப்பிட்ட சமந்தா பவர், அதன் மூலம் நாட்டில் மறுமலர்ச்சி ஏற்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.

ஆபிரிக்காவிலும் ஆசியாவிலும் உள்ள தலைவர்கள் பெரும்பாலும் அதிகாரத்தை தனதாக்கிக் கொள்ள முயற்சிக்கும் வேளை, இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அதிகாரத்தை விட்டுவிடுவதற்கு நடவடிக்கை மேற்கொள்வதை தான் பாராட்டுவதாகவும் குறிப்பிட்டார் அவர், இது ஏனைய உலக தலைவர்களுக்கு ஒரு சிறந்த முன்மாதிரியாகும் என்றும் சுட்டிக்காட்டினார்.

நாட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் புதிய அரசியல் மறுசீரமைப்புக்களின் ஊடாக சந்தேகம் இன்றி பொருளாதார நன்மைகளை பெற்றுக்கொள்ள முடியுமெனக் குறிப்பிட்ட சமந்தா பவர், அதன்மூலம் ஒளி விளக்காக மிளிருவதற்கு முடியும் என்று தெரிவித்தார்.

இலங்கையின் புதிய வேலைத்திட்டம்பற்றி சர்வதேச சமூகம் மிக ஆர்வத்துடன் இருப்பதாகவும் சமந்தா பவர் குறிப்பிட்டார்.

இலங்கையின் நல்லிணக்க வேலைத்திட்டத்தை வெற்றிகொள்ளச் செய்வதற்கு அமெரிக்க அரசு வழங்கிய ஒத்துழைப்பை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நன்றியோடு பாராட்டினார்.

இந்நல்லிணக்க செயன்முறையானது, உண்மையை ஆராய்தல், நியாயம் வழங்குதல், இழப்புக்களை ஈடு செய்தல், மீண்டும் அவை ஏற்படுவதை தடுத்தல் ஆகிய கோட்பாடுகளின் அடிப்படையில் மேற்கொள்ளப்படுவதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

நீண்டகாலமாக நெருக்கடிக்குள்ளாகி உள்ள நாடு என்ற ரீதியில் இவ்வாறான செயற்பாடுகளின்போது பல்வேறு கருத்துக்களைக்கொண்ட குழுக்களுடன் பணியாற்ற வேண்டியுள்ளதாக சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, அங்கு மேலெழும் கருத்துக்களுக்கிடையே முரண்பாடுகள் நிலவுவதாகவும் அதன்போது அரசு என்ற ரீதியல் மிகவும் பொறுமையாக பணியாற்றும் பொறுப்பு புதிய அரசுக்கு உள்ளதாகவும் தெரிவித்தார்.

நாட்டின் சுதந்திரத்தை உறுதி செய்தல், ஜனநாயகத்தை வலுப்படுத்தல், வறுமையை ஒழித்தல் போன்ற விடயங்கள் தொடர்பில் கடந்த 10 மாதங்களுக்குள் அரசு மேற்கொண்ட வேலைத்திட்டங்களின் முன்னேற்றம் பற்றியும் இங்கு ஜனாதிபதியால் சமந்தா பவருக்கு விளக்கம் அளிக்கப்பட்டது. நிறைவேற்று அதிகார ஜனாதிபதி பதவியைச் சுற்றி குவிக்கப்பட்டுள்ள அதிகாரங்களை நாடாளுமன்றத்திடமும் சுயாதீன ஆணைக்குழுக்களிடமும் பகிர்ந்தளிக்க முடிந்துள்ளது என்று ஜனாதிபதி இதன்போது தெரிவித்தார்.

நல்லிணக்க வேலைத்திட்டத்தை அடைந்துகொள்வதில் இலங்கை மேற்கொண்டுள்ள அர்ப்பணிப்புப்பற்றி குறிப்பிட்ட ஜனாதிபதி, வடக்கில் காணிகளை விடுவித்தல், மீளக் குடியமர்த்துதல் ஆகிய நடவடிக்கைகள் போன்றே மாகாணங்களின் அபிவிருத்தி நடவடிக்கைகள் பற்றியும் அரசு அர்ப்பணிப்புடன் செயற்படுகின்றது என்றும் தெரிவித்தார்.

வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர, வெளிநாட்டலுவல்கள் தொடர்பான ஜனாதிபதியின் ஆலோசகர் ஒஸ்டின் பெர்னாண்டோ ஆகியோரும் இதன்போது சுருக்கமாக விளக்கமளித்தனர். இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் அதுல் கேஷாப்பும் இந்தச் சந்திப்பில் பங்கேற்றார் – என்று அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Related Posts