நிரந்தர நியமனம் கோரி யாழில் உண்ணாவிரதம்

நிரந்தர நியமனம் வழங்க வலியுறுத்தி, வட மாகாண தொண்டர் ஆசிரியர்கள், உண்ணாவிரத போராட்டத்தினை மேற்கொண்டுள்ளனர்.

இன்று திங்கட்கிழமை காலை 09.30 அளவில், வடமாகாண ஆளுநர் அலுவலகத்தின் முன்பாக ஒன்று கூடிய அவர்கள், பின், ஆளுநர் செயலக வாயிலை முற்றுகையிட்டு போராட்டத்தினை முன்னெடுத்தனர்.

வட மாகாணத்தில் 1300 தொண்டர் ஆசிரியர்கள் பாடசாலைகளில் எந்தவித கொடுப்பனவுகளுமின்றி சேவை செய்து வருகின்றார்கள்.

பல போராட்டங்களை முன்னெடுத்தும், எந்தவித முடிவுகளும் கிடைக்காத நிலையில், வடமாகாணத்தில் உள்ள யாழ்ப்பாணம், நல்லூர், கிளிநொச்சி, முல்லைத்தீவு, மடு, துணுக்காய், தீவகம் உள்ளிட்ட 12 வலயத்தைச் சேர்ந்த தொண்டர் ஆசிரியர்களும் இதில் கலந்து கொண்டனர்.

இதேவேளை, வடமாகாண ஆளுநர் அலுவலகத்தின் வாயிலை முற்றுகையிட்டு, போராட்டம் செய்ய வேண்டாமென்று ஆளுநர் அலுவலகத்தில் கடமையில் இருந்த பொலிஸார், குறித்த தொண்டர் ஆசிரியர்களுக்கு தெரிவித்தனர்.

முற்றுகைப் போராட்டத்தினை முன்னெடுத்தால், ஆளுநர் அலுவலகத்திற்கு வரமாட்டார் என்றும் பொலிஸார் வாயிலை விட்டு ஒதுக்குப் புறமாக நின்று போராட்டத்தினை முன்னெடுக்குமாறும் கூறினார்.

எனினும் அதனை ஏற்றுக்கொள்ளாத தொண்டர் ஆசிரியர்கள், தமக்கான நிரந்தர நியமனம் வழங்கும் வரையில், வாயிலை விட்டு செல்ல முடியாது, என்று வலியுறுத்தினார்கள்.

இதன்படி, எந்தவித கொடுப்பனவுகளுமின்றி, குடும்ப சுமைகள், மற்றும் மன அழுத்தங்களுடன் தமது கடமைகளை மேற்கொண்டு வருவதாகவும், தமக்கான நிரந்தர நியமனத்தினை வழங்குமாறும் வலியுறுத்தி தொடர்ந்தும் உண்ணாவிரத போராட்டத்தினை முன்னெடுத்து வருகின்றார்கள்.

Related Posts