Ad Widget

தீப்பற்றியது மோட்டார் சைக்கிள் ; இளைஞன் பலி

நெல்லியடி கப்பூது பகுதியில் நேற்று வெள்ளிக்கிழமை (16) மதியம் மோட்டார் சைக்கிள் தீப்பிடித்து எரிந்ததில் குறித்த மோட்டார் சைக்கிளை ஓட்டிச் சென்ற இளைஞன், இன்று சனிக்கிழமை (17) சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்துள்ளதாக நெல்லியடி பொலிஸார் தெரிவித்தனர்.

இச்சம்பவத்தில் கரவெட்டி பகுதியை சேர்ந்த குமாரசாமி நிரோஜன் (வயது 25) என்ற இளைஞனே தீக்காயங்களுக்குள்ளாகி உயிரிழந்துள்ளார்.

கரவெட்டியில் இருந்து கப்பூது நோக்கிச் சென்றுகொண்டிருந்த மேற்படி நபரின் மோட்டார் சைக்கிள், திடீரென தீப்பிடித்து எரிந்துள்ளது. இந்த தீ, மோட்டார் சைக்கிளை ஓட்டிச் சென்ற இளைஞனின் உடலிலும் பரவியதையடுத்து நிலை தடுமாறி அவர் விழுந்துள்ளார்.

உடனடியாக அப்பகுதியால் சென்றவர்கள் குறித்த நபரை மீட்டு பருத்தித்துறை ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு சென்றனர்.

பின்னர், மேலதிக சிகிச்சைக்காக யாழ். போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட நிலையில் சிகிச்சை பலன் இன்றி அவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் கூறினர்.

Related Posts