தமிழ் அரசியல் கைதிகளுக்கு பொதுமன்னிப்பு அளித்து விடுதலை செய்யுமாறு வலியுறுத்தி, யாழ்.மாவட்ட செயலகம் முன்பாக புதன்கிழமை (20) கவனயீர்ப்புப் போராட்டமொன்றை நடத்தவுள்ளதாக முற்போக்குத் தமிழ்த் தேசியக் கட்சியின் செயலாளர் நாயகம் சுதர்சிங் விஜயகாந்த தெரிவித்தார்.
முற்போக்கு தமிழ்த்தேசிய கட்சியியால் ஏற்பாடு செய்யப்பட்ட ஊடகவியலாளர் சந்திப்பொன்று இன்று திங்கட்கிழமை (18) கட்சி அலுவலகத்தில் இடம்பெற்றது. இதன்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அங்கு தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், ‘தமிழ் அரசியல் கைதிகளை பொதுமன்னிப்பு அளித்து விடுதலை செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து இந்தப் போராட்டத்தை மேற்கொள்ளவுள்ளோம்’ என்றார்.
போராட்டத்தின் முடிவில், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் கையளிக்குமாறு எமது கட்சி சார்பான மகஜர் ஒன்றையும் மாவட்ட செயலகத்தில் கையளிக்கவுள்ளோம்.
விடுதலைப் புலிகளின் தலைவர்களாக இருந்தவர்கள் இன்று அரசில் இணைந்து சுகபோக வாழ்க்கையை அனுபவித்து வருகின்றனர். அத்துடன், ஜே.வி.பி போன்ற பெரிய கட்சிகளுக்கு அரசு பொது மன்னிப்பு வழங்கியுள்ளது.
இந்நிலையில் தமிழ் அரசியல் கைதிகளும் பொதுமன்னிப்பு வழங்கி விடுதலை செய்யப்பட வேண்டும். இந்தக் கவனயீர்ப்புப் போராட்டத்தில் அனைத்துக் கட்சிகளையும் மக்கள் பிரதிநிதிகளையும் கலந்துகொள்ளுமாறு வேண்டிக்கொள்வதாக அவர் மேலும் தெரிவித்தார்.