Ad Widget

டக்ளஸ் ஒரு கொலையாளி! – நாடாளுமன்றில் சிறிதரன் எம்.பி பரபரப்பு குற்றச்சாட்டு

ஈ.பி.டி.பி செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா ஒரு கொலையாளி. முன்னாள் அமைச்சர் மகேஸ்வரன், ஊடகவியலாளர் நிமலராஜன் உள்ளிட்ட பலரின் படுகொலையுடன் தொடர்புடையவர். வடக்கில் 3000 இற்கும் மேற்பட்டோர் காணாமல்போகக் காரணமாக இருந்தவர் என்று நாடாளுமன்றத்தில் பரபரப்பான குற்றச்சாட்டுக்களை முன்வைத்தார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன்.

நாடாளுமன்றத்தில் நேற்று கல்வி அமைச்சு, உயர்கல்வி மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சு மீதான விவாதத்தில் உரையாற்றிய அவர், நான் கிளிநொச்சியில் ஆசிரியராக – அதிபராக இருந்த காலப் பகுதிகளில் விடுதலைப் புலிகளுக்கு மாணவர்களைச் சேர்த்துக் கொடுத்தாகவும், அப்படிச் சேர்க்கப்பட்டவர்களை விடுவிப்பதற்கு பணம் பெற்றேன் என்றும் டக்ளஸ் தேவாந்னதா எம்.பி. இந்தச் சபையில் குற்றம்சாட்டியுள்ளார். இந்த விடயங்களை டக்ளஸ் தேவானந்தா நிரூபிப்பாராயின் எனது இந்த அரசியல் வாழ்விலிருந்து முற்றாக ஒதுங்கத் தயார் என அவருக்கு சவால் விடுக்கின்றேன்.

டக்ளஸ் தேவானந்தா ஒரு கொலையாளி. அவர் இந்தியாவால் தேடப்படும் குற்றவாளி. அந்த நாட்டுக்குக்கூட செல்ல முடியாதவர். அவரின் கட்சியைச் சேர்ந்த அற்புதன் மற்றும் முன்னாள் அமைச்சர் மகேஸ்வரன், ஊடகவியலாளர் நிமலராஜன் உள்ளிட்ட பலரின் படுகொலையுடன் டக்ளஸ் தேவானந்தா தொடர்புபட்டவர். வடக்கில் 3000 இற்கும் மேற்பட்டோர் காணாமல்போகக் காரணமாக இருந்தவர். டக்ளஸ் தேவானந்தா என்ற கப்பல் இன்று மூழ்கிக் கொண்டிருக்கின்றது. அவரின் அநீதிகள், குற்றங்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன” – என்றார்.

Related Posts