Ad Widget

ஜோசஃப் பரராஜசிங்கம் திட்டமிட்டு கொலை செய்யப்பட்டார்

தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கத்தின் கொலையை, திட்டமிட்ட படுகொலையாகவே தான் உறுதியாகக் கருதுவதாக மட்டக்களப்பு ஆயர் பொன்னையா ஜோசப் தெரிவித்துள்ளார்.

joseph_pararanasingam

பத்தாண்டுகளுக்கு முன்னர் கிறிஸ்துமஸ் தின நள்ளிரவு ஆராதனையின் போது மட்டக்களப்பு புனித மரியாள் இணைப் பேராலயத்திற்குள் வைத்து அடையாளந் தெரியாதோரால் அவர் சுட்டுக் கொல்லப்பட்டார்.

அவர் படுகொலை செய்யப்பட்ட 10ஆம் ஆண்டு நினைவு நிகழ்வு வெள்ளிக்கிழமை மட்டக்களப்பில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய ஆயர் பொன்னையா ஜோசப் ” மொழிப்பற்றும் கொள்கையில் உறுதிமிக்க அரசியல் வாதியாக திகழ்ந்த அவர் தமிழ் மக்களுக்கு எதிரான இனப் படுகொலைகளை சர்வதேச அரங்கிற்கு கொண்டு சென்றவர். இதன் காரணமாகவே அவர் திட்டமிட்டு படு கொலை செய்யப்பட்டுள்ளார் ” என்று கூறினார்

விடுதலைப்புலிகளுடன் நல்லுறவைப் பேணி வந்தவர் என பலராலும் கருதப்பட்டு வந்த ஜோசப் பரராஜசிங்கம் கிழக்கு மாகாணத்தில் விடுதலைப்புலிகள் அமைப்பில் 2004 இல் ஏற்பட்ட பிளவையடுத்து தான் பாதுகாப்பு அச்சுறுத்தல்களை எதிர் நோக்கியிருப்பதாக அவ்வேளை தனக்கு நெருக்கமானவர்களிடம் தெரிவித்திருந்தார்

தனது பாதுகாப்பு நிமித்தம் சில காலம் கொழும்பில் தங்கியிருந்த அவர் கிறிஸ்துமஸ் தின நள்ளிரவு ஆராதனையில் கலந்து கொள்வதற்காகவே மட்டக்களப்புக்கு அன்றைய தினம் திரும்பியிருந்ததார்.

இவரது படுகொலை சம்பவத்திற்கு விடுதலைப்புலிகள் அமைப்பிலிருந்து விலகிய கருணா என்று அழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதரனே பொறுப்பு எனும் குற்றச்சாட்டுக்களை அவர் மறுத்துள்ளார்.

அதே போல கிழக்கு மாகாணத்தின் முன்னாள் முதலமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தன் மற்றும் வேறு சிலரும் இச்சமவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ளனர். அவரும் இந்தக் குற்றச்சாட்டை நிராகரித்துள்ளார்.

இந்த படுகொலை சம்பவம் தொடர்பாக 10 வருடங்களின் பின்னர் குற்றப்புலனாய்வுத் துறையினரால் விசாரணைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

ஜோசப் பரராஜசிங்கம் படுகொலை திட்டமிட்ட படுகொலை என ஆயர் பொன்னையா ஜோசப் ஒன்றுக்கு மேற்பட்ட தடவைகள் தனது உரையில் தெரிவித்திருந்தாலும் இந்த கைது தொடர்பாகவே அல்லது விசாரணைகள் பற்றியோ எதுவும் தனது உரையில் குறிப்பிடவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

Related Posts