Ad Widget

செல்வநாயகத்தின் கோரிக்கை அன்று ஏற்றுக் கொள்ளப்பட்டிருந்தால் பிரபாகரன் உருவாகி இருக்க மாட்டார்

புதிய அரசியலமைப்பு முறை ஒன்றை உருவாக்குவதற்கான பாராளுமன்ற அரசியலமைப்பு சபை அமைப்பது குறித்த இந்த ஆண்டின் முதலாவது பாராளுமன்ற அமர்வுகள் இன்று காலை ஆரம்பமாகின.

இதன்போது அரசியலமைப்பு சபை ஒன்றை உருவாக்கும் யோசனையை பிரதமர் ரணில் விக்ரமசிங்க பாராளுமன்றத்தில் சமர்பித்தார்.

புதிய அரசியலமைப்பு திருத்தம் தொடர்பான அரசின் கொள்கைகள் மற்றும் பாராளுமன்ற அரசியலமைப்பு சபைக்குறிய உறுப்பினர்கள் குறித்து அவர் தெரிவித்திருந்தார்.

அதன்பின்னர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பாராளுமன்ற அரசியலமைப்பு சபை அமைப்பது குறித்த விஷேட உரையை நிகழ்த்தினார்.

புதிய அரசியலமைப்பு அமைக்கப்படவுள்ளதன் முக்கியத்துவம் குறித்து ஜனாதிபதி இதன்போது உரையாற்றினார்.

இதன்போது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்ததாவது,

நாட்டு மக்களின் விருப்பு வெருப்புக்கள் உள்வாங்கப்பட்ட மற்றும் காலத்துக்கு பொருந்தக் கூடியவாறான அரசியலமைப்பு முறை இருக்க வேண்டும் என்பது எனது கருத்து.

டட்லி சேனாநாயக்க – செல்வநாயகம் மற்றும் பண்டாரநாயக்க – செல்வநாயகம் ஒப்பந்தங்கள் அன்று ஏற்றுக் கொள்ளப்பட்டிருந்தால் பிரபாகரன் என்று ஒருவர் உருவாகி இருக்க மாட்டார்.

நிறேவேற்று அதிகார ஜனாதிபதி முறை இருந்தததனால் தான் யுத்தத்தை நிறைவுக்கு கொண்டுவர முடிந்ததாகவும், ஆகவே நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறை இல்லாது செய்யப்படக் கூடாது என்றும் சிலர் கூறுகின்றார்கள்.

அவ்வாறு நிறேவேற்று அதிகார ஜனாதிபதி முறை இருந்தால் தான் யுத்தத்தை நிறைவுக்கு கொண்டு வர முடியும் என்றால் எதிர்காலத்தில் மீண்டும் யுத்தம் ஒன்று ஏற்பட வேண்டிய தேவை இருக்கின்றதா?

மேலும் ஒரு யுத்தம் ஒன்று ஏற்படாதிருப்பதற்கு நாட்டிற்கு தேவையான நடவடிக்கைகளையே நாங்கள் செய்ய வேண்டும்.

புதிய அரசியலமைப்பு உருவாக்கப்பட உள்ளது குறித்து வெவ்வேறான பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்படுகின்றன.

புதிய அரசியலமைப்பை மாற்றுகின்றபோது, பெடரல் என்றால் தெற்கில் உள்ள அடிப்படைவாதிகளுக்கு கசக்கின்றது.

ஐக்கியம் என்றால் வடக்கில் உள்ள அடிப்படைவாதிகளுக்கு கசக்கின்றது. இவற்றை நிவர்த்தி செய்யவேண்டும்.

புதிய அரசியலமைப்பு உருவாக்குவதனால் பெளத்த மதத்திற்கும், நாட்டின் பாதுகாப்புக்கும் அச்சுறுத்தல் ஏற்பட வாய்ப்பு உள்ளதாக மஹா சங்கத்தினர் என்னிடம் கேட்டனர்.

ஏன் நாங்கள் கலக்கமடைய வேண்டும். எந்தவொரு சந்தர்ப்பத்திலும் அவ்வாறானதொரு நிலமை ஏற்படப் போவதில்லை.

எங்களிடம் அறிவு, திறமை, கடந்தகால அனுபவங்கள் நிறையவே இருக்கின்றன.

இவற்றை கொண்டு நாட்டை கட்டியெழுப்புவதற்காகவும், நாட்டின் எதிர்காலம் குறித்து சிந்தித்துமே செயல்பட வேண்டும்.

வெளிநாட்டு சக்திகளின் அழுத்தங்கள் காரணமாகவே புதிய அரசியலமைப்பு முறை உருவாக்கப்பட இருப்பதாக சிலர் கூறுகின்றார்கள்.

எந்தவொரு சந்தர்ப்பத்திலும் எனக்கோ பிரதமருக்கு எந்த வெளிநாடுகளும் அழுத்தங்கள் பிரயோகிக்கவில்லை.

26 வருட கால யுத்தத்தில் வடக்கு இளைஞர்கள் போலவே தெற்கிலும் எவ்வளவோ இளைஞர்கள் உயிரிழந்தார்கள்.

வடக்கிலும் தெற்கிலும் உள்ளவர்களை ஒன்றிணைக்கும் முறையே எமக்குத் தேவை.

அனைத்து மக்களும் அனைத்து மதத்தினரும் ஐக்கியத்துடன் வாழ்வதற்குறிய இலங்கையை கட்டியெழுப்ப வேண்டும் எனத் தெரிவித்தார்.

Related Posts