Ad Widget

சிறந்த பொழுதுபோக்கு இடமாக மாறிவரும் பண்ணைக் கடற்கரை

யாழ்ப்பாணம் கோட்டை பகுதியின் பின்புறமாகவுள்ள பண்ணை கடற்கரை பகுதி, அழகாக்கப்பட்டு பொழுதுபோக்கு இடமாக மாற்றப்பட்டுள்ளதால், மாலை வேளைகளில் பெருமளவான மக்கள் அங்குச் சென்று, கடற்கரை அழகை இரசிப்பதோடு அங்கு நடைபயிற்சிகளையும் உடற்பயிற்சிகளையும் மேற்கொண்டு வருகின்றனர்.

நகர அபிவிருத்தி அதிகார சபையின் வேலைத்திட்டத்தின் கீழ், பண்ணையை சுற்றுலா இடமாக மாற்றும் நடவடிக்கை கடந்த 2013ஆம் ஆண்டு 23 மில்லியன் ரூபாய் செலவில் முன்னனெடுக்கப்பட்டது.

தற்போது பெரும்பாலான வேலைத்திட்டங்கள் பூர்த்தியடைந்துள்ள நிலையில், அங்கு பெருமளவான பொதுமக்கள் ஒன்றுகூடுகின்றனர். இந்நிலையில், பொதுமக்களுக்கு அசௌகரியங்கள் ஏற்படுத்தும் வகையில், பல சம்பவங்கள் இப்பகுதியில் இடம்பெற்று வருகின்றன.

இப்பகுதிக்கு இரவு வேளைகளில் வரும் கும்பல்கள், அங்குள்ள இருக்கைகளில் அமர்ந்து இருட்டினுள் மது அருந்தி விட்டு மது போத்தல்கள், உணவுகள் என்பவற்றை அப்பகுதிகளில் விட்டுவிட்டு செல்கின்றனர். இதனால், அப்பகுதியில் அதிகாலையில் நடைபயிற்சி மற்றும் உடற்பயிற்சி செய்ய செல்வோர், பல அசௌகரியங்களை எதிர்நோக்கி வருகின்றார்கள்.

நடைபாதையில் மோட்டார் சைக்கிள் மற்றும் சைக்கிள்களை செலுத்த வேண்டாம் என அறிவுறுத்தல் பலகை நாட்டப்பட்டுள்ள போதிலும், அங்கு வருபவர்கள், நடைபாதையில் அவற்றை செலுத்துகின்றார்கள். நடைபாதைகள் அலங்கார கற்களால் அமைக்கப்பட்டு உள்ளதால் அவற்றின் மீது மோட்டார் சைக்கிள்களை செலுத்துவதால், அந்த நடைபாதை சேதத்துக்குள்ளாகியும் வருகின்றது.

யாழ்ப்பாண மக்களுக்கு சரியான பொழுதுபோக்கு இடங்கள் இல்லை என்ற குறையை நிவர்த்தி செய்யும் வகையில் அமைந்துள்ள பண்ணைக் கடற்கரையை அழகுபடுத்தும் போது, அதனை பேணிப்பாதுகாப்பது எமது கடமையாகும்.

Related Posts