Ad Widget

கூட்டமைப்பை பலவீனப்படுத்த முயன்றால் பேரவையில் இருந்து வெளியேறி விடுவோம்! – சித்தார்த்தன்

தமிழ் மக்கள் பேரவை பரந்துபட்ட அளவில் மக்கள் பங்குகொள்ளும் அமைப்பாகவே உருவாக்கப்பட்டிருக்கிறது. இது மக்களின் அபிப்பி்ராயங்களைப் பெற்றுக் கொண்டு தீர்வை ஏற்படுத்துகின்ற நோக்கத்தின் அடிப்படையிலேயே தற்போது உருவாக்கப்பட்டிருக்கிறது. இந்த அமைப்பில் நாங்கள் மிகத் தெளிவான நிலைப்பாட்டிலேயே இணைந்து கொண்டிருக்கிறோம் என புளொட் அமைப்பின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்தார்.

தமிழ் மக்கள் பேரவையில் அவர் இணைந்து கொண்டமை தொடர்பில் கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில், ‘தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள் குழப்பத்தை ஏற்படுத்துவதற்காகவோ அல்லது மாற்றுத் தலைமையை ஏற்படுத்துவதற்காகவோ தமிழ் மக்கள் பேரவை உருவாக்கப்படவில்லை. மாறாக, கூட்டமைப்புக்கு துணையாகவும் தீர்வுத் திட்டமொன்றை முன்வைப்பதற்காகவுமே இந்த அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. கூட்டமைப்புக்குள் குழப்பம் என்று கூறுவது தவறு. ஆனால், கருத்து முரண்பாடுகள் இருக்கின்றன. இவை பேசித் தீர்க்கப்பட வேண்டும்.

குறிப்பாக முதலமைச்சர் விக்கினேஸ்வரனும் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தனும் முரண்பாடுகளைத் தவிர்த்து ஒன்றாக இணைந்து கொள்வது காலத்தின் தேவையாகும். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை பலவீனப்படுத்துகின்ற நோக்கம் இருந்தால் நாங்கள் வரவும்; மாட்டோம் தொடர்ந்து இருக்கவும் மாட்டோம் என ஏற்கெனவே பேரவையினருக்கு கூறியிருக்கின்றோம். இதேவேளை, தீர்வுத் திட்ட வரைபுகள் முன்வைக்கப்பட்டு தீர்வு நோக்கி பயணிக்கும் வரை கூட்டமைப்பை பலவீனப்படுத்துவதையோ அல்லது தலைமையை மாற்றுவதையோ நாங்கள் ஏற்றுக்கொள்ளமாட்டோம்.

மேலும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு ஓர் ஆதரவாக இயங்க தயாராக இருக்கின்ற அமைப்பாகவே தமிழ் மக்கள் பேரவை செயற்படும். அது அரசியலில் அல்ல தீர்வு விடயத்தில் என்றும் பேரவையினர் தெரிவித்திருக்கின்றனர். இதன் பின்னரே நாங்கள் பேரவையில் இணைந்து கொண்டிருக்கின்றோம்’ எனவும் அவர் தெரிவித்தார்.

Related Posts