Ad Widget

குழந்தையை பிரசவித்து கைவிட்டு சென்ற சிறுமி கண்டுபிடிப்பு!!

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் குழந்தையை பிரசவித்த பின்னர் , குழந்தையை வைத்தியசாலையில் கைவிட்டு சென்ற 15 வயதான சிறுமியை பொலிஸார் மீட்டுள்ளனர்.

அந்த சிறுமியை வன்புணர்ந்து கர்ப்பமாக்கிய குற்றச்சாட்டில் 25 வயதான இளைஞனையும் பொலிஸார் கடந்த 12ம் திகதி கைது செய்து விளக்கமறியலில் வைத்துள்ளனர்.

துன்னாலையில் கராஜ்ஜில் பணியாற்றும் மல்லாவி பகுதியை சேர்ந்த 25 வயதான இளைஞனே இவ்வாறு கைது செய்யப்பட்டு பருத்தித்துறை நீதவான் நீதிமன்றத்தினால் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

குறித்த 15 வயது சிறுமி மந்திகை ஆதார வைத்தியசாலையில் பரிசோதனைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் பிறந்த குழந்தை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் நலமுடன் உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் கடந்த வாரம் 15 வயதான சிறுமி பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், தாயாரும் சிறுமியுடன் உதவிக்கு நின்றுள்ளார்.

சிறுமிக்கு குழந்தை பிறந்ததும் மறுநாள், தாயும் சிறுமியும் குழந்தையை வைத்தியசாலையில் கைவிட்டு அங்கிருந்து தப்பி சென்றனர்.

சம்பவம் தொடர்பில் வைத்தியசாலை நிர்வாகத்தினர் யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்தனர்.

முறைப்பாட்டின் பிரகாரம் விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார், சிறுமி நெல்லியடி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியை சேர்ந்தவர் என கண்டறிந்து , அது தொடர்பில் நெல்லியடி பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டது.

நெல்லியடி பொலிஸார் முன்னெடுத்த விசாரணைகளின் அடிப்படையில் , குழந்தையை பிரசவித்த சிறுமியையும் , அவரது தாயாரையும் கண்டறிந்து பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணைகளை முன்னெடுத்தனர்.

விசாரணைகளின் அடிப்படையில் , சிறுமியை வன்புணர்வுக்கு உட்படுத்தி, கர்ப்பமாக்கிய
இளைஞனை கைது செய்து நீதிமன்ற உத்தரவுப்படி விளக்கமறியலில் வைத்துள்ளனர்.

இதுவரை தாயும் பிறந்த குழந்தையும் இணைக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Related Posts