Ad Widget

கணவர் உயிருடன் இருப்பார் என்று நம்பிக்கையில்லை: நட்டஈடை தாருங்கள்

காணாமல் போன எனது கணவர் தற்போது உயிருடன் இருப்பார் என்ற நம்பிக்கை எனக்கில்லை. எனது கணவரின் மரணச்சான்றிதழையும் பெற்றுவிட்டேன். எனவே, எனக்கு நட்டஈடு தாருங்கள் என்று, காணாமல் போன முஹமட் அஜ்மீன் என்பவரது மனைவி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

காணாமல் போனார் தொடர்பாக விசாரணைகளை மேற்கொள்ளும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் ஆறு நாட்கள் அமர்வு, கடந்த வெள்ளிக்கிழமை (11) யாழ்ப்பாணத்தில் ஆரம்பிக்கப்பட்டது.

இதன் இரண்டாம் நாள் அமர்வு, வெள்ளிக்கிழமை (12) இடம்பெற்ற போதே, அவர் மேற்கண்டவாறு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தன்னால் இந்த விசாரணைகளுக்கு ஒத்துழைப்பு வழங்குவது கடினம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்,

‘கடந்த 1991ஆம் ஆண்டு மே மாதம் 28ஆம் திகதியின் பின்னர், எனது கணவரை காணவில்லை. நான் அப்போது புத்தளத்தில் இருந்தேன். எனது கணவன் தாண்டிகுளம் பகுதியில் கூலி வேலை செய்து வந்தார். மாதத்துக்கு ஒரு முறை புத்தளத்துக்கு வருவார். இவர் காணாமல் போன போது, அவர் இருந்த பகுதி தமிழீழ விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுக்கு கீழ் இருந்த்து.

எனது கணவருடன் சேர்த்து ஐந்து பேர் காணாமல் போயிருந்தனர்’ என்று அவர் தெரிவித்துள்ளர்.

மேலும், ‘எனது கணவர் உட்பட காணாமல் போன ஐவரும் தற்போது உயிருடன் இருப்பார்கள் என்ற நம்பிக்கை எமக்கில்லை. நாம் அனைவரும் மரணச்சான்றிதழும் பெற்று விட்டோம். மிகுதி நால்வரில் சில உறவினர் நட்டஈடு பெற்றுக்கொண்டுள்ளனர். எனினும் எனக்கு நட்ட ஈடு கிடைக்கப்பெறவில்லை’ என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

தான் தற்போது கொழும்பில் வசித்து வருவதாகவும் ஆணைக்குழு நட்ட ஈடாக வழங்கும் ஒரு இலட்சம் ரூபாய் போதாது என்று தெரிவித்துள்ள அவர், யாழ்ப்பாணத்திலுள்ள தனது சொந்த நிலத்தில் வீடொன்றை அமைத்து தருமாறும் கோரியுள்ளார்.

குறித்த பெண்ணின் கோரிக்கையை, ஆணைக்குழு பரிந்துரை செய்துள்ளது.

Related Posts