துஷ்பிரயோகத்தின் பின்னர் படுகொலை செய்யப்பட்ட தனது மகள் குறித்து எவருக்கும் அக்கறை கிடையாது என சேயா சதெவ்மியின் தந்தை தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடுகையில், கொண்டயா எனப்படும் துனேஷ் பிரியசாந்த தொடர்பில் சட்டத்தரணிகள் தீவிர அக்கறை காட்டுவதாகவும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.
தனது மகளின் படுகொலை தொடர்பில் கைது செய்து விடுவிக்கப்பட்ட கொண்டயா தொடர்பில் ஒருசில சட்டத்தரணிகள் தீவிர அக்கறை காட்டுவதோடு, அவர் சார்பாக மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கும் செல்வதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
கொண்டயா தொடர்பில் இவ்வளவு தீவிர அக்கறை காட்டும் எவரும் சிறுமி சேயா தொடர்பில் கவனம் செலுத்துவது இல்லை எனவும் தெரிவித்துள்ளார்.
சேயாவின் மரணம் தொடர்பில் நீதியை நிலைநாட்டுமாறு எவரும் கோரிக்கை வைப்பதாக தெரியவில்லை எனவும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.
கம்பஹா பிரதேசத்தில் சேயா சதெவ்மி என்ற சிறுமி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் கொட்டதெனியா பொலிஸார் பலரை கைது செய்து விசாரணைக்கு உட்படுத்திய போதிலும் இதுவரை சந்தேகநபர் அடையாளம் காணப்படவில்லை.
இந்நிலையில் பொலிஸாரின் இந்த பொறுப்பற்ற செயல் குறித்து பல்வேறு விமர்சனங்கள் எழுந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.