யாழ்ப்பாணம், இராசாவின் தோட்டப் பகுதியில் சனிக்கிழமை (16) இரவு, இளைஞனொருவர் இனந்தெரியாத நபர்களினால் மேற்கொண்ட வாள்வெட்டில், படுகாயங்களுக்குள்ளாகி யாழ். போதனா வைத்தியசாலையின் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இச் சம்பவத்தில் அதே பகுதியைச் சேர்ந்த ஞானசேகரன் தர்மிகன் (வயது 21) என்ற இளைஞனே இவ்வாறு வாள்வெட்டுக்குள்ளாகியுள்ளதாக யாழ். குற்றத்தடுப்பு பொலிஸார் தெரிவித்தனர்.
கொட்டடி பகுதியில் உள்ள சிகையலங்கரிப்பு நிலையத்தில் தொழில் புரியும் குறித்த இளைஞன், வழமை போல் வேலை முடித்துவிட்டு இரவு வீடு சென்றுக்கொண்டிருந்த போது, கொய்யாத்தோட்டம் பகுதியில் வைத்து, இவரை வழி மறித்த நபர்கள் வாளாள் சரமாரியாக வெட்டிவிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.
இதையடுத்து, படுகாயங்களுக்குள்ளான குறித்த இளைஞனை அப்பகுதி மக்கள், யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.