இலங்கையில் வெளிப்படைத்தன்மை மிக்க ஜனநாய சமூகத்தை ஏற்படுத்த உதவும் என அமெரிக்கா உறுதியளித்துள்ளது. அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பிற்கான ஆலோசகர் சூசன் ரைஸ் இதனை தெரிவித்துள்ளார்.
அமெரிக்க ஜனாதிபதி பராக் ஓபாமாவின் தேசிய பாதுகாப்பு கொள்கை குறித்த தனது உரையிலேயே அவர் இதனை குறிப்பிட்டார்.
மாற்றத்தை சந்தித்திருக்கும் இலங்கை, மியன்மார், துனீசியா போன்ற நாடுகளுக்கு நாங்கள் உதவுவோம் என அவர் கூறினார்.
இதேவேளை அமெரிக்க இராஜங்க திணைக்களத்தின் பிரதிபேச்சாளர் மேரி ஹர்வ் நல்லிணக்கம் மற்றும் நீண்டகால பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்காக இலங்கையின் புதிய அரசாங்கம் எடுத்துள்ள ஆரம்ப கட்ட முயற்சிகளை பாராட்டினார்.
நீண்ட கால விடயங்கள்-உரிமைகள், நல்லாட்சி, ஜனநாயகம், பொறுப்புக்கூறுதல் போன்ற விடயங்களுக்கு தீர்வை காண மேற்கொள்ளப்பட்ட முயற்சிகளை நாங்கள் வரவேற்கின்றோம். நிச்சயமாக சில சாதகமான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன என அவர் தெரிவித்தார்.