தங்களை இராணுவ புலனாய்வாளர்கள் எனக்கூறி சாவகச்சேரி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியை மிரட்டிய மூவரை நேற்று செவ்வாய்க்கிழமை (09) இரவு கைது செய்துள்ளதாக சாவகச்சேரி பொலிஸார் தெரிவித்தனர்.
கைதடி வீதியில் தலைக்கவசங்கள் இன்றி மோட்டார் சைக்கிளில் பயணித்த மூவரை சிவில் உடையில் வீதியில் நின்ற சாவகச்சேரி பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி சோதனை செய்து செய்ய முயன்ற போது, தாங்கள் இராணுவப் புலனாய்வாளர்கள் எனவும் தங்களை சோதனை செய்யவேண்டாம் எனவும் கூறியுள்ளனர்.
அடையாள அட்டையை காண்பிக்குமாறு பொறுப்பதிகாரி, மூவரிடமும் கோரியபோது, உங்களுக்கு அடையாள அட்டையை காண்பிக்க வேண்டிய அவசியமில்லையென பொறுப்பதிகாரியுடன் முரண்பட்டுள்ளனர்.
இதன்போது, அருகிலிருந்த வாகனத்திலிருந்து பொலிஸார் இறங்கி வருவதை அவதானித்த மூவரும் தாங்கள் முரண்பட்டது பொலிஸ் பொறுப்பதிகாரியுடன் என்பதை உணர்ந்துள்ளனர்.
மூவரையும் கைது செய்து பொலிஸ் நிலையத்துக்கு கொண்டு சென்றதாகவும் மூவரும் மது அருந்தியிருந்ததாகவும் பொலிஸார் கூறினர்.
கைது செய்யப்பட்டவர்கள் 20, 26 மற்றும் 31 வயதுடையவர்கள் எனவும் அவர்கள் மீது தனித்தனியான வழக்குகள் பதிவு செய்யவுள்ளதாக பொலிஸார் கூறினர்.