Ad Widget

இரகசிய தடுப்புமுகாம் குறித்து யாரும் சாட்சியமளிக்கவில்லையாம்! – பரணகம

திருகோணமலையில் இரகசிய தடுப்பு முகாம்கள் இருப்பதாக தமது ஆணைக்குழுவில் எவரும் சாட்சியமளிக்கவில்லை என்றும், அவ்வாறு யாராவது சாட்சியமளித்திருந்தால் நாங்களும் திருமலையில் உள்ளதாகக் கூறப்படும் இரகசிய முகாமுக்கு சென்று பார்த்திருப்போம் என்றும் தெரிவித்துள்ளார் காணாமல்போனோர் குறித்து விசாரணை நடத்தும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் தலைவர் மக்ஸ்வெல் பரணகம.

நாங்கள் வடக்கு கிழக்கு மாகாணங்கள் முழுவதும் எமது ஆணைக்குழுவின் ஊடாக அமர்வுகளை நடத்தி பாதிக்கப்பட்ட மக்களிடம் சாட்சியங்களை பெற்றுக்கொண்டோம்.அந்தவகையில் நாங்கள் சாட்சியங்களை மக்களிடம் பெற்றபோது சாட்சியமளித்தவர்கள் எவரும் திருகோணமலையில் இரகசிய தடுப்பு முகாம்கள் இருப்பதாக கூறவில்லை.

அவ்வாறு எமக்கு யாராவது சாட்சியமளித்திருந்தால் நாங்களும் திருமலையில் உள்ளதாகக் கூறப்படும் இரகசிய முகாமுக்கு சென்று பார்த்திருப்போம். எங்களிடம் யாரும் சாட்சியமளித்திருந்தால் அதன்படி செய்திருப்போம். ஆனால் அமர்வுகளை நடத்தும்போது இவ்வாறு யாராவது சாட்சியமளித்திருந்தால் அது தொடர்பில் ஆராய்ந்திருப்போம்.

எமது ஆணைக்குழுவானது மிகவும் அர்ப்பணிப்புடனேயே இந்த காணாமல் போனோர் குறித்த விடயங்களை ஆராய்ந்து வருகின்றோம். அந்தவகையில் யாழ்ப்பாணத்திலும் அமர்வுகளை நடத்துகின்றோம். இது மிகவும் பரந்துபட்ட ஆணைக்குழுவாகும். யுத்தகாலத்தில் காணாமல்போனவர்கள் தொடர்பில் விசாரணை நடத்துவது என்பது இலகுவானதல்ல. எனினும் நாங்கள் அதனை மேற்கொண்டுவருகின்றோம்.

காணாமல் போனோர் உயிருடன் இருக்கின்றனரா? இறந்துவிட்டனரா? என்ன நடந்தது என்பது குறித்து ஆராய்வது இலகுவான விடயமல்ல. எனினும் நாங்கள் அதனை செய்துவருகின்றோம் என்று அவர் தெரிவித்துள்ளார்.

Related Posts