இலங்கை கடற்பரப்புக்குள் குறிப்பாக வடபகுதி கடற்பரப்புக்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபடுகின்ற இந்திய றோலர் படகுகளைக் கட்டுப்படுத்த சரியான நடவடிக்கையை இலங்கை மத்திய அரசாங்கம் மேற்கொள்ள வேண்டும். அதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் அழுத்தங்கள் கொடுக்க வேண்டும் என இலங்கை கடலுணவுகள் ஏற்றுமதியாளர் சங்கம் தெரிவித்தது.
அந்தச் சங்கத்தின் கடலுணவு ஆய்வாளர் ஸ்ரீவ் கிறிச், யாழ். ஊடக அமையத்தில் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் கூறியதாவது,
‘இந்திய றோலர்களின் அத்துமீறல்கள் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு மற்றும் மன்னார் கடற்பகுதியில் அதிகமாகக் காணப்படுகின்றன. இலங்கையில் கடல் வளங்களை அவர்கள் சூறையாடிச் செல்கின்றனர்.
அவர்களைக் கட்டுப்படுத்த தற்போது இலங்கையில் இருக்கின்ற சட்டங்கள் சரியானவையாகவிருக்காது. மீன்பிடியில் ஈடுபட்டவர்கள் குடிவரவு சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுகின்றனர். பின்னர் அவர்களின் உபகரணங்களுடன் விடுவிக்கப்படுகின்றனர். அவர்கள் இலங்கைக்கு வந்த சுற்றுலா பயணிகள் அல்ல.
அவர்கள் ஒரு நாட்டில் வளத்தைச் சுரண்டுகின்றனர். அவர்களைக் கைது அவர்களின் படகுகள் மற்றும் உபகரணங்களை பறிமுதல் செய்த பின்னர் அவர்களை விடுவிக்க வேண்டும். உபகரணங்களை விடுவிக்கக்கூடாது’ என்றார்.
‘கடந்த அரசாங்கத்தின் காலத்தில் மாதாந்தம் 5 தடவைகள் மீனவர்கள் கைது செய்யப்பட்டு, பின்னர் விடுவிக்கப்பட்டும் வந்தனர். ஆனால் இந்திய மீனவர்களின் அத்துமீறலானது மாதத்துக்கு 6,000 தடவைகள் இடம்பெறுகின்றன.
அத்துமீறலுக்கு ஏற்றவகையில் கைதுகள் காணப்படவில்லை. கைதுகள் அதிகரிக்கப்படவேண்டும்’ என அவர் மேலும் கூறினார்.