Ad Widget

‘ஆணைக்குழுவிடம் கோரிய நிதி கிடைக்கவில்லை’ – முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன்

வட மாகாண சபையின் 2016ஆம் ஆண்டு வரவு– செலவுத்திட்டத்துக்கென நிதி ஆணைக்குழுவிடம் கோரிய நிதி ஒதுக்கீட்டில் 40சதவீதம் மாத்திரமே கிடைத்துள்ளதாக வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.

வடமாகாண சபையின் 2016ஆம் ஆண்டுக்கான நிதிச் சட்டமூலத்தை சபையில் செவ்வாய்க்கிழமை(15) சமர்ப்பித்து உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில்,

மீண்டெழும் செலவினத்துக்காக 20,479 மில்லியன் ரூபாய் நிதி கோரிய போதும், ஆணைக்குழுவால் 18,574.23 மில்லியன் ரூபாய் நிதியே ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதேபோல், மூலதனச் செலவினத்துக்காக 7,978.03 மில்லியன் ரூபாய் கோரப்பட்ட போதும், 4,695.65 மில்லியன் ரூபாய் நிதியே ஆணைக்குழுவால் ஒதுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை,உள்ளூராட்சி மன்றங்களுக்கு மாற்றுவதற்கான முத்திரை தீரவைக் கட்டணமாக 160 மில்லியன் ரூபாயும் நீதிமன்ற தண்டப்பணமாக 10 மில்லியன் ரூபாயும் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது என்றார்.

மேலும்,வடக்கு வீதி ,ணைப்பு அபிவிருத்தித் திட்டம்,இரணைமடு நீர்ப்பாசன அபிவிருத்தித் திட்டம் மற்றும் யாழ்ப்பாணம், கிளிநொச்சி நீர்விநியோகத்துக்கும் சுகாதார மேம்பாட்டுக்குமான கருத்திட்டம் ஆகியவற்றுக்கு 4,152.35 மில்லியன் ரூபாயும் மத்திய அரசாங்கத்தின் நேரடி நிதி ஆளுகையில் கீழ் வடக்கு மாகாண சபைக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

நிதி வரையறுக்கப்பட்ட காரணத்தினால் மாகாணத்துக்குரிய இனங்காணப்பட்ட வருடாந்த தேவைகளை முழுமையாகப் பூர்த்தி செய்யமுடியாதநிலை ஏற்பட்டுள்ளது எனவும் அவர் தெரிவித்தார்.

Related Posts