யாழில் இராணுவ சோதனை நடவடிக்கைகளை கையடக்க தொலைபேசியில் ஒளிப்படம் மற்றும் காணொளியாக பதிவுசெய்த யாழ்.மாநகர சபை உறுப்பினரை இராணுவத்தினர் கடுமையாக எச்சரித்து விடுவித்துள்ளனர்.
யாழ்.கஸ்தூரியார் வீதியில் நேற்று (திங்கட்கிழமை) மாலை இராணுவத்தினர் மற்றும் பொலிஸார் இணைந்து வீதி சோதனை நடவடிக்கையை முன்னெடுத்தனர்.
இதன்போது, தமிழ் தேசிய கூட்டமைப்பின் யாழ்.மாநகர சபை உறுப்பினர் ஒருவர், சோதனை நடவடிக்கைகளை பதிசெய்துள்ளார்.
அதனை அவதானித்த இராணுவத்தினர் உறுப்பினரின் தொலைபேசியினை பறிமுதல் செய்து பதிவுகளை அழித்தபின்னர், கடுமையாக எச்சரித்து விடுவித்துள்ளனர்.
கடந்த ஈஸ்டர் ஞாயிறு தினத்தன்று நாட்டின் பல பகுதிகளில் நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதல் மற்றும் கிழக்கில் கடந்த வெள்ளிக்கிழமை இடம்பெற்ற குண்டுவெடிப்பு சம்பவங்களைத் தொடர்ந்து முப்படையினரும் இணைந்து நாட்டின் சகல பிரதேசங்களையும் சோதனையிட்டு வருகின்றனர். இதற்கான உத்தரவை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பிறப்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.