கொழும்பு உள்ளிட்ட நாட்டின் 8 இடங்களில் தற்கொலை குண்டுத்தாக்குதல்களை நடத்திய தேசிய தெளஹீத் ஜமாத் அமைப்பு இரண்டாவது தாக்குதல்களையும் நடத்த திட்டமிட்டுள்ளதாக இந்தியப் புலனாய்வு இலங்கை அதிகாரிகளை எச்சரித்துள்ளது.
இந்த தகவலை இந்திய புலனாய்வு நிறுவனத்தின் (NITE) மூத்த அதிகாரியை மேற்கோள்காட்டி இந்திய ஆங்கில ஊடகமான ஹிந்துஸ்தான் டைம்ஸ் பத்திரிகையும் செய்தி வெளியிட்டுள்ளது.
இரண்டாம் கட்ட தாக்குதல் ஒன்றுக்கு தேசிய தெளஹீத் ஜமாத் அமைப்பு ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பின் வழி நடத்தலில் தயாராவதாகவும், அதன் முக்கிய தலைவர் ஒருவர் தனது சகாக்களுடன் டோகாவிலிருந்து நாடு திரும்பியுள்ளாதாகவும் அந்தச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தாக்குதலின் இலக்கு உள்ளிட்ட விடயங்களை வெளிப்படுத்த புலனாய்வு மற்றும் தொழில் நுட்ப உதவிகளை வழங்க தயாராக இருப்பதாக இந்தியப் புலனாய்வு நிறுவனம் இலங்கையின் அதிகாரிகளுக்கு அறிவித்துள்ளது.
இதேவேளை, நாட்டில் நடந்த குண்டு வெடிப்பு தாக்குதல்கள் கடந்த மார்ச் மாதம் நியூசிலாந்து பள்ளிவாசல்களில் நடந்த தாக்குதலுக்கு பதிலடியாகவே நடத்தப்பட்டிருக்கிறது என்று பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவன் விஜயவர்தனே இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
தேசிய தவ்ஹீத் ஜமாத்தும், மற்றொரு இஸ்லாமியவாதக் குழுவான ஜே எம் சி-யும் இணைந்து இத்தாக்குதலை தாக்குதலை நடத்தியிருக்கின்றன என்று அவர் தமது உரையில் தெரிவித்தார்.
ஆனால் இது தொடர்பான மேற்கொண்டு எந்தவித தகவலையும் அவர் அளிக்கவில்லை.
பாதுகாப்பு அமைச்சரான ஜனாதிபதி நாட்டில் இல்லாத நிலையில், பாதுகாப்புத் துறை இராஜாங்க அமைச்சரும், பிரதமருமே பாதுகாப்புக்குப் பொறுப்பானவர்கள். ஆனால், இத்தகைய தாக்குதல் நடக்க இருப்பது தொடர்பாக கிடைத்த தகவல்கள் பாதுகாப்புத் துறை இராஜாங்க அமைச்சரான தம்மிடமும், பிரதமரிடமும் பகிர்ந்துகொள்ளப்படவில்லை என்று அமைச்சர் ருவன் விஜயவர்த்தன குற்றஞ்சாட்டினார்.