வருட இறுதிக்குள் தீர்வு வேண்டும்: ஜனாதிபதியிடம் மாவை வலியுறுத்தல்

தமிழர்களின் இனப்பிரச்சினைக்கு இந்த வருட இறுதிக்குள் தீர்வினை முன்வைக்க வேண்டும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா ஜனாதிபதியை வலியுறுத்தியுள்ளார்.

மேலும், வடக்கில் இடம்பெறும் சிங்களக் குடியேற்றங்களை தடுத்து நிறுத்த வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்தார்.

மயிலிட்டி துறைமுக புனரமைப்பிற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு நேற்று (புதன்கிழமை) மயிலிட்டி துறைமுக வளாகத்தில் நடைபெற்றது.

குறித்த நிகழ்வில் கலந்துக் கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர், நல்லாட்சி அரசாங்கம் ஆட்சியை பொறுப்பேற்று மூன்று ஆண்டுகள் ஆனபோதிலும், தமிழ் மக்களின் இனப்பிரச்சினைக்குத் தீர்வு காணப்படவில்லை. மக்களின் நிலங்கள் முழுமையாக விடுவிக்கப்படவில்லை. நாங்கள் மீண்டும் உங்களில் நம்பிக்கை கொண்டு நிலங்கள் விடுவிக்கப்படுமென்ற அறிவிப்பை எதிர்பார்க்கின்றோம்.

சர்வதேச நெருக்கடிகளில் இருந்து இந்த நாட்டினை பாதுகாக்க வேண்டுமாயின், தமிழ் மக்கள் மீண்டும் போராடும் நிலமை உருவாகாமல் தடுக்க வேண்டுமாயின், இனப்பிரச்சினை தீர்க்கப்பட வேண்டும். இனப்பிரச்சினை தீர்விக்கு ஜனாதிபதி நடவடிக்கை எடுக்கப்படாவிடின், நல்லாட்சியின் அபிவிருத்தி செயற்பாடுகள் பயனற்று போகும்.

தமிழ் மக்கள் தங்களை ஆளக்கூடிய வகையில், இந்த நாட்டில் இனப்பிரச்சினையை ஒரு அரசியல் தீர்வினை உருவாக்க வேண்டுமென்று கோரிக்கை விடுக்கின்றேன். மக்களின் நிலங்கள் விடுவிக்கப்பட வேண்டும். இல்லாவிடின் அபிவிருத்தியை பேசி பயனில்லை.

மக்களின் நிலங்களை மக்களிடம் கையளிக்க வேண்டும். அதனூடாக இந்த நாட்டில் நல்லிணக்கம் ஏற்படும். எமது மக்களினால், தான் இன்று நீங்கள் பதவியில் இருக்கின்றீர்கள் என்பதனை ஞாபகத்தில் வைத்துக் கொள்ளுங்கள்” எனத் தெரிவித்தார்.

Related Posts