காரைநகர் பிரதான வீதியில் வலந்தலைச் சந்தியில் அமைக்கப்பட்டுள்ள காரைநகர் வரவேற்பு அலங்கார வளைவு இன்று சமய வழிபாடுகளுடன் திறந்துவைக்கப்பட்டது.

காரைநகர் வரவேற்பு வளைவு திறப்புவிழா நிகழ்வு காரைநகர் பிரதேச சபையின் ஜக்கியதேசியக்கட்சி உறுப்பினரான சுந்தேரஸ்வரன் கிருஷ்ணவரதன் தலைமையில் இடம்பெற்றது.
திறப்பு விழா நிகழ்விற்கு பிரதம அதிதியாக சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரனும், சிறப்பு அதிதியாக யாழ்ப்பாணம் மாநகர சபை ஆணையாளர் இ.த.ஜெயசீலனும் கலந்து கொண்டனர்.
வீணாகான குருபீட குரு முதல்வர் சந்நிதாச்சாரியர் சிவஸ்ரீ சபா வாசுதேவக் குருக்களின் சமய வழிபாடுகளுடன் இடம்பெற்றது.
சமய வழிபாடுகள் மற்றும் கிரியைகளின் பின்னர் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன், யாழ்.மாநகரசபை ஆணையாளர் இ.த.ஜெயசீலன் ஆகியோருடன் நிகழ்வில் கலந்துகொண்டவர்களும் இணைந்து நினைவுக்கல்லை திரைநீக்கம் செய்து வைத்தனர்.
தொடர்ந்து வரவேற்பு வளைவின் மேல் அமைக்கப்பட்டுள்ள நாடராஜர் சிலையை வீணாகான குருபீட குரு முதல்வர் சந்நிதாச்சாரியார் சிவஸ்ரீ சபா வாசுதேவக் குருக்கள் திரைநீக்கம் செய்துவைத்தார்.
இதன்பின்னர் நடாவெட்டப்பட்டு, உத்தியோகபூர்வமாக யாழ்ப்பாணம்-காரைநகர் பிரதான வீதியில் அமைக்கப்பட்ட நுழைவாயில் திறந்த வைக்கப்பட்டது.
இந்த நுழைவாயில் திறப்புவிழா நிகழ்வில் சமய குருமார்கள், காரைநகர் பிரதேச மக்கள், மாநகர, பிரதேசபை உறுப்பினர்கள், பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் எனப் பலர் கலந்துகொண்டிருந்தனர்.