கண்டியில் இடம்பெற்ற வன்முறைகள் தொடர்பான விசாரணைகள் இன்னமும் பூர்த்தியாத நிலையில் அவசரகாலச்சட்டத்தை மேலும் நீடிக்க நடவடிக்கை எடுக்குமாறு பாதுகாப்பு அதிகாரிகள் இலங்கைப் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இலங்கைப் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் நேற்று வாராந்த பாதுகாப்புச் சபைக் கூட்டம் இடம்பெற்றபோதே, கூட்டுப்படைகளின் தளபதி அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்ன உள்ளிட்ட பாதுகாப்பு உயர்மட்ட அதிகாரிகள், அவசரகாலச்சட்டத்தை மேலும் நீடிப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கண்டியில் அண்மையில் நடந்த வன்முறைகள் தொடர்பாக நடத்தப்படும் விசாரணைகள் 70 வீதம் நிறைவடைந்துள்ளதாகவும், எஞ்சிய விசாரணைகளும் முடியும் வரை அவசரகாலச்சட்டத்தை நீக்கும் முடிவை தாமதிக்குமாறும் அவர்கள் கோரியுள்ளனர்.
இந்த நிலையில் ஜப்பானுக்குச் சென்றிருந்த இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நாடு திரும்பியதும் அவரைச் சந்திக்கும் பிரதமர் இந்த விடயத்தை அவரது கவனத்துக்குக் கொண்டு செல்லவுள்ளார் என்று அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
ஜப்பானில் இருந்து இலங்கை ஜனாதிபதி நாடு திரும்பியதும் அவசரகாலச்சட்டத்தை நீக்கும் அறிவிப்பை நாளை வெளியிடுவார் என்று முன்னதாக செய்திகள் வெளியாகியிருந்தன.