ஈழத் தமிழர்கள் நிம்மதியற்று இன்றும் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகங்கொடுத்து வருகின்ற நிலையில், இலங்கை அரசாங்கத்தை தொடர்ந்தும் காப்பாற்றிவரும் நாடுகளின் தூதுவராலயங்களை எதிர்வரும் கிழமைகளில் முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தவுள்ளதாக வடக்கு மாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன் தெரிவித்துள்ளனார்.
வடக்கு மக்களின் நில மீட்புப் போராட்டம் மற்றும் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் முன்னெடுக்கும் போராட்டம் ஆகியவற்றிற்கு ஆதரவாக யாழில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் மேற்குறித்தவாறு தெரிவித்தார்.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சியில் அச்சுறுத்தலுக்கு மத்தியில் பல போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வந்தன என சுட்டிக்காட்டிய அனந்தி, நல்லாட்சியின் ஆரம்பத்தில் அவை குறைவடைந்திருந்த போதும் நில மீட்பு, காணாமல் போனவர்கள் மற்றும் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பாக மீண்டும் போராடும் நிலைக்கு மக்கள் தள்ளப்பட்டுள்ளனர் எனக் குறிப்பிட்டார்.
மக்கள் எதிர்பார்த்த எந்தவொரு முன்னேற்றத்தையும் இதுவரை கண்டிராத நிலையில், ஐ.நா.வுக்கு வழங்கிய வாக்குறுதிகளில் எவற்றையெல்லாம் நிறைவேற்றினோம் என்பதை சொல்லவேண்டிய கடப்பாட்டில் இலங்கை அரசாங்கம் உள்ளதென்றும் அனந்தி சசிதரன் இதன்போது குறிப்பிட்டார்.