நாவற்குழியில் குடியேறியுள்ள சிங்கள மக்களுக்கு வீடமைப்புத்திட்டம் அமைத்து கொடுக்கப்படவுள்ளதாக தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் யாழ். மாவட்ட முகாமையாளர் எம்.ரவீந்திரன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
2016ம் ஆண்டு யாழ் மாவட்டத்தைச் சேர்ந்த 989 பேருக்கான வீட்டுக் கடன்களை யாழ். மாவட்ட தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபை வழங்கியுள்ளது. இதன்படி, ஒவ்வொரு குடும்பத்திற்கும் தலா 350,000 ரூபா வீதம் வீட்டுத் திருத்த வேலைகளுக்காக வழங்கப்பட்டுள்ளது.
இதற்காக 86.55 மில்லியன் ரூபா நிதி செலவிடப்பட்டுள்ளது. மேலும் 3000 குடும்பங்களுக்கு குடும்பம் ஒன்றிற்கு 10 சீமெந்து பைகள் வீதம் வழங்கப்பட்டுள்ளது. இதற்காக 24.7 மில்லியன் ரூபாய் நிதி செலவிடப்பட்டுள்ளது.
அத்துடன் 2017ம் ஆண்டிற்கான மிகப்பெரிய திட்டமாக நாவற்குழி பிரதேசத்தில் 250 வீடுகளைக் கொண்ட மாதிரிக் கிராமம் ஒன்று அமைக்கப்படவுள்ளது. நாவற்குழி பிரதேசத்தில் குடியேறியுள்ள 200 தமிழ் குடும்பங்கள், 50 சிங்களக் குடும்பங்களுக்கான வீடுகளை, வீடொன்றிற்கு 5 இலட்சம் ரூபா செலவில் குறித்த மாதிரிக் கிராமத்தில் அமைக்கவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
