யாழ்ப்பாணத்தில் காணப்பட்ட வாள்வெட்டு கலாச்சாரமானது ஒரளவு குறைந்திருந்த நிலையில் தற்போது அண்மைக்காலமாக மீளவும் அதிகரிக்க தொடங்கியுள்ளது.
இவ்வாறான நிலையில் நேற்றுமுன்தினம் இரவு யாழ்.குடாநாட்டி நகரப்பகுதிகளில் மூகமுடி அணித்த கும்பலொன்று வாள்வெட்டுத்தாக்குதலில் ஈடுபட்டிருந்ததையடுத்து யாழ்.நகரில் பதற்றமான சுழல் ஏற்பட்டது.
இந்நிலையில் இவ் வாள்வெட்டு தாக்குதல் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
நேற்றுமுன்தினம் இரவு சுமார் 8.30 மணியளவில் யாழ்.நகரப் பகுதியான நாவலர் கலாச்சார மண்டபப்பகுதி இராசாவின் தோட்டச் சந்தி ஆகிய பகுதிகளில் கூரிய ஆயுதங்களுடன் கும்பலொன்று நடமாடியதாக அவர்களை நேரில் கண்ட பலர் தெரிவித்திருந்தனர். குறிப்பாக இவர்கள் கோடரி வாள் இரும்புக் கம்பிகள் போன்றவற்றை வைத்திருந்ததாகவும் அத்துடன் இரண்டு மோட்டார் சைக்கிளில் மூவர் வீதம் ஆறுபேர் முகங்களை கறுப்புத் துணியால் மறைத்து தலைக்கவசங்களை அணிந்திருந்ததாகவும் நேரில் கண்டவர்கள் தெரிவித்தனர்.
தொடர்ந்து இக் கும்பலானது இலுப்பையடி சந்திக்கு அண்மையில் இருந்த வாகனமொன்றின் கண்ணாடிகளை அடித்து நொறுக்கிவிட்டு அதன்பின்னர் இராசாவின் தோட்டச் சந்திக்கு அண்மையிலுள்ள புகையிரத கடவையில் வைத்து சிலர் மீது வாள்வெட்டுத்தாக்குதலை நடாத்தியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
மேலும் இச் சம்பவமானது நடைபெற்ற போது புகையிரத கடவை மூடப்பட்டிருந்ததாகவும் இவ் வாள்வெட்டு சம்பவத்தை நேரில் பார்த்த சிலர் அச்சத்தின் காரணமாக ஒட முற்பட்ட போது அவர்களில் ஒருவர் புகையிரத கடவையின் மீது மோதியதால் தலைப்பகுதியில் காயமடைந்தாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இந்நிலையில் இவ்வாறான சம்பவங்கள் தொடர்பில் வாள்வெட்டுக்களை மேற்கொண்டவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் அவர்களை கைது செய்வதற்கான நடவடிக்கைகளை தாம் மேற்கொண்டுள்ளதாகவும் யாழ்.மாவட்டத்திற்கு பொறுப்பான பொலிஸ் உயர் அதிகாரியொருவர் தெரிவித்திருந்தார்.
இதேவேளை கடந்த சில மாதங்களுக்கு முன்னர் இது போன்ற வாள்வெட்டு கலாச்சாரமானது யாழ்.குடாநாட்டில் அதிகரித்திருந்ததுடன் இவற்றில் பிரதான சந்தேகநபர்களாக மூவர் அடையாளப்படுத்தப்பட்டு அவர்களை கைது செய்வதற்கான விஷேட பொலிஸ் குழுக்களும் அமைக்கப்பட்டிருந்தது. இருந்தபோதிலும் குறித்த மூவரும் தப்பியிருந்த நிலையில் அவர்களுக்காக இவ் வாள்வெட்டு சம்பவங்களை செய்திருந்த வேறுசிலர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தனர்.
இவ்வாறான நிலையில் குறைந்திருந்த வாள்வெட்டு சம்பவமானது தற்போது மீள ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக மீண்டும் இரவு வேளைகளில் யாழ். குடாநாட்டில் பயங்கரமான பதட்டமான ஒர் சுழல் ஏற்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கதாகும்.