உலகச் சந்தையில் எரிபொருளின் விலையில் வீழ்ச்சி ஏற்பட்டும் இதுவரையில் அதன் பயனை எமது நாட்டு மக்கள் அனுபவிப்பதற்கு வாய்ப்பு கிட்டாதுள்ளமை துரதிஸ்டவசமான நிலைமையாகுமென ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் (ஈ.பி.டி.பி) செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா, கேள்வி எழுப்பியுள்ளார்.
இவ்விடயம் தொடர்பில் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ள அவர் மேலும் கூறியுள்ளதாவது,
‘எரிபொருளின் விலை உலகச் சந்தையில் வீழ்ச்சியுற்றுள்ளது. ஆனால், இலங்கையில் இன்னும் அதனது விலையில் மாற்றங்கள் ஏதும் செய்யப்படாத நிலையே காணப்படுகின்றது. இன்றைய நிலையில் அத்தியாவசிய பொருட்கள் உட்பட ஏனைய பொருட்களின் விலைகள் அதிகரித்துக் காணப்படுகின்ற ஒரு சூழ்நிலையும் தொடர்கிறது.
இவ்வாறான நிலையில், எரிபொருளின் விலை குறைக்கப்படுமானால், ஏனைய பொருட்களின் விலைகளிலும் வீழ்ச்சியேற்படும். எனவே, அரசு இதனை அவதானத்தில் எடுத்து செயற்பட வேண்டும்’ என அவர் குறிப்பிட்டுள்ளார்.