யாழ் மாவட்டத்தில் வளலாய், வசாவிளான், தெல்லிப்பளை பிரதேசங்களில் மீள்குடியேறிய விவசாயிகளுக்கு வடமாகாண விவசாய அமைச்சால் மறுவயற்பயிர் விதைகள் விநியோகிக்கப்பட்டுள்ளது.
மீள்குடியேறிய விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்குடனும், மறுவயற்பயிர்ச் செய்கையை ஊக்குவிக்கும் நோக்குடனும் நிலக்கடலை, பயறு, உழுந்து ஆகிய மறுவயற்பயிர் விதைகளை விநியோகிக்கும் நிகழ்ச்சி திருநெல்வேலியில் அமைந்துள்ள மாவட்ட விவசாயப்பயிற்சி நிலையத்தில் நடைபெற்றது.
நேற்று திங்கட்கிழமை (23.11.2015) பிரதி விவசாயப் பணிப்பாளர் கி.ஸ்ரீபாதசுந்தரம் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் வடமாகாண விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் கலந்துகொண்டு மறுவயற்பயிர் விதைகளை வழங்கி வைத்துள்ளார்.
மீள்குடியேறிய விவசாயிகளில் 123 பயனாளிகள் தெரிவுசெய்யப்பட்டு ஒவ்வொருவருக்கும் 3 கிலோ நிலக்கடலை, 2 கிலோ பயறு, 2 கிலோ உழுந்து வழங்கப்பட்டுள்ளன. ஒரு ஏக்கர் செய்கைக்குப் போதுமான இவ்விதைகளோடு மண்வெட்டி, கத்தி போன்ற விவசாய உபகரணங்களும் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.
ஒவ்வொரு விவசாயிக்கும் வழங்கப்பட்ட விதைகள் மற்றும் உபகரணங்களின் பெறுமதி 2600 ரூபா எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னார், வவுனியா, மாவட்டங்களிலும் மீள்குடியேறிய விவசாயிகளுக்கு மறுவயற்பயிர் விதைகள் வடக்கு விவசாய அமைச்சால் விநியோகிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.