“அதிகார மோகம் பிடித்து அலைந்து திரியும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை நிரந்தரமாக வீட்டுக்கு அனுப்பவே நாங்கள் புதிய கூட்டணியை அமைக்கத் தீர்மானித்துள்ளோம். அந்தக் கூட்டணியில் வேட்பு மனுக்களை நாம் கையளிப்போம். இனி புதிய அரசியல் கலாசாரத்தை உருவாக்க நடவடிக்கை எடுப்போம். தேர்தலுக்குப் பின்னர் உருவாக்கப்படும் புதிய அரசில் 5 விடயங்களை அடிப்படையாகக்கொண்டே வேலைத்திட்டங்களை முன்னெடுப்போம்.” – இவ்வாறு ஐக்கிய தேசிய கட்சியின் தலைவரும் பிரதமருமான ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.
ஐக்கிய தேசிய கட்சியின் விசேட சம்மேளனம் நேற்று சனிக்கிழமை கொழும்பு கெம்பல் பார்க மைதானத்தில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். அவர் தனது உரையில் மேலும் தெரிவித்ததாவது:-
மஹிந்த ராஜபக்ஷ மீண்டும் அதிகாரத்துக்கு வந்தார் நாடு நாசமாகிவிடும். எமது குடும்பத்தின் எதிர்காலமா? அல்லது மஹிந்த குடும்பத்தின் எதிர்காலமா ? என்பதனை மக்களே தீர்மானிக்க வேண்டும். எதிர்வரும் பொதுத் தேர்தல் இடம்பெறும் ஓகஸ்ட் 17ஆம் திகதி நாட்டு மக்கள் முக்கிய தீர்மானம் மேற்கொள்ள வேண்டிய நாளாகும். ஒவ்வொருவரும் தமது குடும்பத்தின் எதிர்காலம் தொடர்பாக சிந்தித்துத் தீர்மானமெடுக்க வேண்டும்.
தமது குடும்பமா அல்லது மஹிந்தவின் குடும்பமா முக்கியா என வாக்களிக்க முன்னர் சிந்திக்க வேண்டும். மக்கள் மஹிந்தவை ஆதரிப்பார்களாயின் மீண்டும் நாடு துன்பத்துக்கு செல்லும். ஜனவரி 8ஆம் திகதி மக்களின் எதிர்காலத்தை கருத்தில்கொண்டே நாம் மைத்திரிபாலவை வெற்றிபெற செய்தோம். அந்த வெற்றியை நாம் தொடர்ந்தும் தக்கவைத்துக்கொள்ள வேண்டும்.
மிகப் பெரிய யுத்தத்திற்கு மத்தியில் மைத்திரி வெற்றி பெற்றுவிட்டார். யுத்தத்தின் மிகுதி பகுதியை ஐ.தே.க. ஓகஸ்ட் 17 இல் வெற்றிக் கொள்ளும். மஹிந்த ராஜபக்ஷ ஆட்சியில் நாடு நாசப்படுத்தப்பட்டுவிட்டது. யுத்த காலத்திலும் சரி அதன் பின்னரும் சரி அவர்கள் சம்பாதிக்கும் செயற்பாடுகளில் ஈடுபட்டார்களே தவிர அபிவிருத்திகளை மேற்கொள்ளவில்லை. கல்வி, சுகாதாரம் போன்ற துறைகளில் பாரிய பிரச்சினைகள் இருந்தன. வேலையில்லாப் பிரச்சினை, அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் அதிகரிக்கப்பட்டன. மக்கள் ஒருவேளை உணவுக்குக் கூட திண்டாடும் நிலைமையும் காணப்பட்டது. இவ்வாறான நிலையிலும் ராஜபக்ஷ குடும்பம் ஹில்டன் ஹோட்டலில் சொகுசாக உணவு உட்கொண்டனர். சுவிட்ஸிலாந்து சொக்லட் வகைகளால் செய்யப்படும் சோஸ் மூலமே உணவு உட்கொண்டனர். அதுவும் கைகளில் அல்ல தங்கக் கரண்டிகளில். இப்படித்தான் அவர்களின் வாழ்க்கை காணப்பட்டது.
அதிகார மோகம் பிடித்து அலைந்து திரியும் மஹிந்தவை நிரந்தரமாக வீட்டுக்கு அனுப்பவவே நாங்கள் புதிய கூட்டணியை அமைக்கத் தீர்மானித்துள்ளோம். அந்தக் கூட்டணியில் வேட்பு மனுக்களை நாம் கையளிப்போம். இனி புதிய அரசியல் கலாசாரத்தை உருவாக்க நடவடிக்கை எடுப்போம்.
இதேவேளை, தேர்தலுக்குப் பின்னர் உருவாக்கப்படும் புதிய அரசில் 5 விடயங்களை அடிப்படையாகக் கொண்டே வேலைத்திட்டங்களை முன்னெடுப்போம். நாடு பூராகவும் 48 பொருளாதார பிரதேசங்களை உருவாக்குவோம். அத்துடன் புதிய தொழிற் துறைகளையும் அமைப்போம். வாகன உற்பத்தி தொழிற்சாலையையும் இங்கு அமைப்போம். அத்துடன் ஓட்டோ துறையையும் விரிவுபடுத்துவோம். ஓட்டோ விபத்தில் உயிரிழப்பவர்களின் குடும்பத்துக்காக 10 இலட்சம் ரூபா வரை நஷ்ட ஈடு வழங்க நடவடிக்கையெடுப்போம். அத்துடன் கல்வித்துறையையும் அபிவிருத்தி செய்வோம் – என்றார்.