கிரிக்கெட் போட்டியின் போது பந்து தாக்கியதில் லண்டனில் மரணமான யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ஈழத்தமிழரான பத்மநாதன் பாவலனின் பூதவுடலை இலங்கைக்கு கொண்டுவருவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
எதிர்வரும் வாரத்தில் அவரது பூதவுடலை யாழ்ப்பாணம் – பருத்தித்துறையிலுள்ள அவரது இல்லத்துக்கு எடுத்து வருவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவரது உறவினர்கள் தெரிவித்தனர்.
லண்டன் சர்ரே பகுதியிலுள்ள ரீகிரியேஷன் மைதானத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை பிரித்தானிய தமிழர் கிரிக்கெட் சம்மேளனம் நடாத்திய கிரிக்கெட் போட்டித் தொடரில், மானிப்பாய் பரிஷ் விளையாட்டுக் கழக அணியில்பாவலன் பங்கேற்றிருந்தார்.
எதிரணியினர் வீசிய பந்து அவரது நெஞ்சுப் பகுதியைத் தாக்கியதால் அவ்விடத்திலேயே அவர் உயிரிழந்தார். பாவலனைக் காப்பாற்ற மைதானத்துக்கு விரைந்த மருத்துவர்கள் கடுமையாக முயற்சிகள் எடுத்தபோதும் அவை பலனளிக்கவில்லை.
உயிரிழந்த பத்மநாதன் பாவலன் பருத்தித்துறை ஹாட்லிக் கல்லூரியின் பழையமாணவர் ஆவார். அவர் 2001ஆம் ஆண்டு முதல் 2009ஆம் ஆண்டு வரை ஹாட்லிக் கல்லூரியில் கல்வி பயின்றுள்ளார்.
உயர்தரத்தில் கணித்துறையில் கல்வி பயின்றார். பாடசாலைக் காலத்தில் கிரிக்கெட் அணியிலும், சதுரங்க அணியிலும் பங்கேற்று பாடசாலைக்கு பல வெற்றிகளைத் பெற்றுக் கொடுத்துள்ளார்.
இவரது காலத்தில் சதுரங்க போட்டியில் நாட்டப்பட்ட வெற்றி இன்று வரை முறியடிக்கப்படவில்லை என பாசாலையின் அதிபர் தர்மலிங்கம் முகுந்தன் தெரிவிக்கின்றார்.
பாடசாலை கல்விக்குப் பின்னர் பாவலன் 2010 இல் லண்டனுக்குச் சென்றார். அவரது தந்தையார் 1997 இல் நோய் காரணமாக உயிரிழந்திருந்தார். தாயாரும் ஒரு சகோதரியும், ஒரு சகோதரனும் பருத்தித்துறையில் வசித்துவருகின்றனர்.