சுன்னாகம் நிலத்தடி நீர், கழிவு எண்ணெய் கலந்ததால் மாசடையவில்லை. விவசாயத்துக்கு பயன்படுத்தப்படும் கிருமிநாசினி கலப்பினாலேயே நிலத்தடி நீர் மாசடைந்துள்ளது என ஆய்வு அறிக்கை தெரிவிக்கின்றது. அதனால் இந்த நிலத்தடி நீர் மாசுக்கு நாம் காரணமில்லை என்று மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்தார்.
இலங்கை மின்சார சபையின் வடமாகாண பிரதி பொது முகாமையாளர் அலுவலக கட்டிட தொகுதியினை திறந்துவைத்த அமைச்சர், அங்கு உரையாற்றும் போதே மேற்கண்டவாறு கூறினார்.
அங்கு தொடர்ந்து உரையாற்றிய அமைச்சர், ‘சுன்னாகம் நிலத்தடி நீர் மாசடைந்தமை தொடர்பான ஆய்வுகள் இடம்பெறுகின்றன. 2010ஆம் ஆண்டில், சுன்னாகம் பகுதிக்கு சென்று விவசாயிகளுடன் கலந்துரையாடினோம். அதன்போது அவர்கள் அங்கு கிருமிநாசினி பாவனை இல்லை என்று தெரிவித்திருந்தனர். ஆயினும், கிருமி நாசினியால் தான் நீர் மாசடைந்துள்ளது என்று ஆய்வு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது’ என்றார்.
‘எனவே, தொழில்நுட்ப அறிக்கை வந்த பின், இதில் எமது தவறு இருக்குமிடத்து அதற்கான நட்டஈட்டினை நாம் வழங்குவோம். மேலும் 24 மணிநேர சேவையில் தற்போது 90 வீதமான மின்பாவனையே உள்ளது. இதை இவ்வருட இறுதியில் 100 வீதமாக மாற்றுவோம். இதனை விட குறைந்த வருமானம் உடையவர்களுக்கு இலவச மின்சாரம் வழங்கும் திட்டம் உள்ளது. அதனை தற்போது புனர்வாழ்வு அமைச்சிடம் கையளித்துள்ளோம். அதுவும் விரைவில் நடைமுறைப்படுத்தப்படும்.
இனிமேல் மின்சார சபையின் சகல வசதிகளுக்கும் திறைசேரி வரி பெறப்படமாட்டாது. அதனை நாமே ஈடுசெய்வோம். தற்போது வடக்கு, கிழக்கில் மின்சாரம் சார்ந்த அபிவிருத்திகள் நிறைய செய்ய வேண்டியுள்ளன. அதற்கான நிதி கிடைக்கப்பெற்றதும் விரைவில் இதன் வேலைதிட்டங்கள் தொடங்கப்படும்’ என்றும் அமைச்சர் கூறினார்.
’24 மணிநேர மின் வழங்கும் நாடாக இலங்கை உள்ளது. இலங்கைக்கு சிறந்த எதிர்காலமும் நல்ல வளமும் உள்ளது. இதனை நாம் முறையாக பயன்படுத்தி நாம் முன்னேற வேண்டும். இரத்த கசிவுகளை நோக்கி சென்றால் இவை அனைத்தையும் நாம் இழக்க வேண்டிவரும். அதை நோக்கி செல்லாதீர்கள்.
முன்பு, பொருளியலாளர்களை கொண்டிருந்த யாழில் தற்போது பொருளியலாளர்களை தேடவேண்டி உள்ளது. வடக்கு கிழக்கில் பொருளியல் பீடம் ஒன்றை நிறுவும் வேலைத்திட்டம் ஆரம்பிக்கபடவுள்ளது. எனவே, தயவு செய்து பொருளியல் மாணவர்கள் வெளிநாடு செல்லாது நம் நாட்டிற்கே பணிபுரியுங்கள்’ என்று அவர் தெரிவித்தார்.