Ad Widget

யாழில் நடந்தது சில விஷமிகளின் சேட்டையே! பொதுமக்களின் வன்முறையல்ல!-டக்ளஸ்

யாழ். புங்குடுதீவு பாடசாலை மாணவி படுகொலைச் சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் நோக்கிலும், குற்றவாளிகள் உயர்ந்தபட்ச தண்டனைகளுக்கு உட்படுத்தப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தியும் யாழ்ப்பாணத்தில் மேற்கொள்ளப்பட்ட மக்களது உணர்வு வெளிப்பாட்டு நிகழ்வானது, ஒரு சில சமூக விரோத சக்திகளால் திசை மாற்றஞ் செய்யப்பட்டதே தவிர, இது பொதுமக்களின் வன்முறைச் செயற்பாடுகளல்ல. எனவே, இதனை வடக்கில் மீண்டும் ஆயுத வன்முறையைத் தோற்றுவிக்கும் சம்பவமாக உருவாக்கஞ் செய்யக்கூடாது என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி(ஈ.பி.டி.பி)யின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தெரிவித்துள்ளார்.
தென்பகுதி சிங்கள ஊடகவியலாளர்களுக்கு மேற்படி விடயம் தொடர்பில் தெளிவுபடுத்திய டக்ளஸ் தேவானந்தா அவர்கள் மேலும் கருத்து தெரிவிக்கையில்,  இந்தியாவின் புதுடில்லியில் மருத்துவக் கல்லூரி மாணவி ஒருவர் பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்தப்பட்ட சம்பவத்தின்போது முழு இந்திய நாடுமே கொந்தளிந்தது.
ஜனநாயக சூழலில், தமது சமூகத்தைப் பாதிக்கின்ற சம்பவங்கள் நடைபெறும்போது மக்கள் தங்கள் உணர்வுகளை வெளிப்படுத்த முனைவது இயல்பு.
யாழ்ப்பாணத்தில்கூட மக்கள் தங்களது உணர்வுகளை அமைதியான முறையிலேயே வெளிப்படுத்த ஆரம்பித்திருந்தனர். ஆனால் இடைநடுவில் இதனை தமக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொண்ட சில சந்தர்ப்பவாத சுயநலமிகள், அதனை ஒரு வன்முறை வடிவமாகக் காட்ட முனைந்துள்ளனர். பொதுவாக, இவ்வாறு இடம்பெறுவது தென்பகுதிக்கு ஒன்றும் புதிதல்ல.
மேற்படி மாணவியின் கொலை தொடர்பான விசாரணைகள் பாரபட்சமற்ற முறையில் நடைபெற்று, குற்றவாளிகள் கடுமையான தண்டனைகளுக்கு உட்படுத்தப்பட வேண்டும். இவர்களுக்கு வழங்கப்படும் தண்டனையானது ஏனையவர்களுக்கு ஒரு பாடமாக அமையவேண்டும் என நாம் கேட்டிருக்கின்றோம்.
அதே நேரம், எமது நாட்டின் சட்டத்தை மீறிய வகையிலான சில கருத்துக்களை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரும், அரசின் பிரதி அமைச்சர் ஒருவரும் கூறி,  தூண்டிவிடப்பட்ட சிலரும் இவ்வாறான குழப்பங்களை ஏற்படுத்தியுள்ளதாகவும் அறியமுடிகிறது.
எனவே, இங்கு வன்முறைச் சம்பவங்களில் ஈடுபட்டவர்கள் எமது அப்பாவி பொதுமக்கள் அல்லர். ஒரு சில சுயநல அரசியல்வாதிகளின் அடியாட்களே ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். இதனை எமது மக்கள் மேற்கொண்ட வன்முறையாக உருவாக்கஞ் செய்வது தவறானது என்றும் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.

Related Posts