மாவட்ட அபிவிருத்திக் குழுக்களுக்கு கூட்டமைப்பின் மூத்த உறுப்பினர்கள் தலைவர்களாக வரவேண்டும். எங்கள் கோரிக்கைகள் 100 நாள் வேலைத் திட்டத்தில் நிறைவேற்ற வேண்டும் என்பதே எமது நோக்கம் என வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.
வவுனியா, வைரவ புளியங்குளத்தில் உள்ள அவரது அலுவலகத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை மாலை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
தொடர்ந்தும் அங்கு கருத்து தெரிவித்த அவர்,
முன்னைய அரசு தமது அமைச்சர்கள் ஊடாக, அரச உத்தியோகத்தர்கள், திணைக்கள் தலைவர்கள் உள்ளிட்ட அனைவரையும் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்தது.
இதன் காரணமாக ஊழல் நிறைந்து போய் இருந்தது. எங்களுடைய பிரதேசங்கள் கவனிப்பாரற்றுக் கிடந்தன. இப்போது அந்த ஆட்சி முடிவுக்கு வந்திருக்கின்றது.
எங்களுடைய அதிகாரிகள் மக்களுக்கு சேவையாற்றும் திறமையுடையவர்கள். அவர்களை அவர்களுடைய பணியை செய்ய விட்டால் மக்களுக்கு நன்மை கிட்டும். புதிய அரசாங்கத்திற்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஆதரவு தெரிவிக்கின்ற காரணத்தால் எங்களுடைய பிரதேசங்கள் இனி அபிவிருத்தியடையும்.
இதேவேளை, இனப்பிரச்சினைத் தீர்வு, அரசியல் கைதிகள் விடுதலை, மீள்குடியேற்றம், எமது மக்கள் மீது அழுத்தங்களை பிரயோகிக்கக் காரணமான வடமாகாண ஆளுநர் மற்றும், பிரதம செயலாளர் உட்பட வடக்கு, கிழக்கில் உள்ள அரச அதிபர்கள் மாற்றம் என்பனவும் புதிய அரசிடம் முன்வைக்கப்பட்டுள்ள எமது கோரிக்கைகளாகும். – எனத் தெரிவித்தார்.