எதிர்வரும், ஜனாதிபதி தேர்தலில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு முற்போக்கு தமிழ் தேசிய கட்சி ஆதரவு வழங்குவதாக முற்போக்கு தமிழ் தேசிய கட்சியின் செயலாளர் நாயகம் சுதர்சிங் விஐயகாந் செவ்வாய்க்கிழமை (09) தெரிவித்தார்.
ஜனாதிபதி தேர்தலில் முற்போக்கு தமிழ் தேசிய கட்சி யாருக்கு ஆதரவு வழங்குவது தொடர்பில் கட்சியின் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை (09) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் விஜயகாந் தொடர்ந்து கருத்துக்கூறுகையில்,
மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவு வழங்குவது என்பதை எமது கட்சியின் மத்தியகுழு, செயற்குழு, பொதுக்குழு ஆகியன இணைந்து எடுத்துள்ளன.
தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை, வடக்கு கிழக்கு மாகாணங்களில் இருந்து சுவீகரிக்கப்பட்ட தமிழ் பேசும் மக்களின் காணிகளை மீண்டும் ஒப்படைத்தல், தமிழ் மக்கள் வாழ்கின்ற பிரதேசங்களில் சரியான சிவில் நிர்வாகத்தை ஏற்படுத்தல், வடமாகாண சபைக்கு விசேட அதிகாரங்களினை வழங்குதல் ஆகிய கோரிக்கைகளினை முன் வைத்துள்ளோம்.
அந்த கோரிக்கைகளை செயற்படுத்துவோம் என மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கம் உறுதியளித்துள்ளமைக்கு அமையவே அவருக்கான ஆதரவை நாங்கள் வழங்குகின்றோம். தமிழர்களின் பிரச்சினைகள் தங்களுக்கு தெரியும் என்றும் அவற்றை படிப்படியாக தீர்க்க முனைவோம் என ஆளுங்கட்சியினர் வாக்குறுதியளித்துள்ளனர்.
தேர்தல் விஞ்ஞாபனத்தில் சிறுபான்மை தமிழர்கள் பற்றி மஹிந்த ராஜபக்ஷ குறிப்பிடாமல் இருந்தால் அத்தருணத்தில் தக்க முடிவை எடுப்போம் எனவும் விஜயகாந் தெரிவித்தார்.