இராணுவக் கெடுபிடிகள் உடனடியாக நிறுத்தப்படவேண்டும்- யாழ்.பல்கலை மாணவர் ஒன்றியம்

நேற்று முன்தினம் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஆண்கள் விடுதியில் இராணுவப் புலனாய்வாளர்கள் அத்துமீறி உள்நுழைந்து தேடுதல் நடத்தியதைக் கண்டித்து யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

அந்த அறிக்கையின் முழு விவரம் வருமாறு:-

நேற்றையதினம் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஆண்கள் விடுதியெங்கணும் இராணுவப் புலனாய்வாளர்கள் அத்துமீறி உள்நுழைந்து அந்துசந்தெல்லாம் சல்லடைபோட்டுத் தேடுதல் நடத்தியுள்ளதுடன் மாணவர்களையும் அச்சுறுத்திச் சென்றுள்ளனர்.

இதனால் மாணவர் விடுதி மற்றும் பல்கலைக்கழக சூழலில் பெரும்பதற்றம் நிலவுகின்றது. இது தொடர்பாக நிர்வாகத்தினருக்கு அறிவித்தும் பேசாமடந்தைகளாக இருப்பது மாணவர் மத்தியில் பெரும் அதிருப்தியை அளித்துள்ளது. இரண்டாவது தடவையாக துணைவேந்தராகப் பதவியேற்று சில மணிநேரங்களிலேயே இத்தகைய சம்பவம் நடைபெற்றுள்ளது என்றால் எதிர்வரும் காலங்களில் மாணவர்களின் பாதுகாப்பு எவ்வாறு இருக்கும் என்பது மாணவர்கள் மத்தியில் தற்போதைய கேள்வியாக உள்ளது.

மாணவர் விடுதிகளினுள்ளே பதிவு செய்யப்படாத மாணவர்களைத் தவிர ஏனைய மாணவர்கள் உட்பட எவருமே அனுமதிக்கப்படுவதில்லை. தெரியாத்தனமாக உள்நுழைந்தாலும் கண்ணில் எண்ணெய் ஊற்றிய பாவனையில் விடுதிக்காப்பாளர் சம்பந்தப்பட்டவர்களை வெளியேற்றிவிடுவார்.

இது விடுதியைச் சேர்ந்த மாணவர்களின் பாதுகாப்புக் கருதியே நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது எனக் கூறப்பட்டாலும் இராணுவப் புலனாய்வாளர்களின் இந்த அத்துமீறல் எதற்காக? அனைத்துவகைகளிலும் எமது கருத்துரிமைகளைப் பயங்கரவாதம் என்ற பொருளைக் காரணம் காட்டி அடக்கிவரும் பாதுகாப்புத் தரப்பு காரணமே இல்லாமல் இவ்வாறு அத்துமீறி உள்நுழைந்து தேடுதல் நடத்துகின்றமையானது மாணவர்கள் மத்தியில் கடும் அச்ச உணர்வினை ஏற்படுத்தியுள்ளது.

யுத்தம் முடிவடைந்து பயங்கரவாதத்தை வேரோடு பிடுங்கி யெறிந்துவிட்டோம் எனப் பகிரங்கமாக முரசறைந்த இலங்கை அரசாங்கம் இன்றுவரை தான்கூறும் அத்தகைய பயங்கரவாதத் தாக்குதல்களை சிறியளவேனும் எதிர்கொண்டதுமில்லை. இந்நிலையில் இல்லாத ஒன்றை இருப்பதாகத் தானே உருவாக்கிக்கொண்டு ஒட்டுமொத்த தமிழினத்தையும் தொடர்ந்தும் அச்சுறுத்தும் நடவடிக்கைகள் எல்லாம் எதற்காக என ஐயுற வைக்கின்றது.

இலங்கை ஆளும் அரசாங்கமே! நாங்கள் மாணவர்களே தவிர நீங்கள் தேடுகின்ற அந்த அருவங்களில்லை. இதுவரை நாம் பட்ட துன்பங்களெல்லாம் போதும். கல்வி ஒன்றே எமக்குரிய வாழ்வுரிமைப் பொருளாகக் கருதி ஜனநாயகத்தை நேசிக்கும் எம்மீது அந்தத்துளிகளைத் தெளிக்காதீர். நாம் கேட்பதெல்லாம் மாணவர்களுக்குரிய நியாயமான உரிமைகளே.

நாம் எப்போதும் ஜனநாயகத்தை நேசிப்பவர்கள். ஆகவே எமது கல்விச் செயற்பாடுகளிற்கு இடையூறுகளை ஏற்படுத்தவல்ல இத்தகைய விஷமத்தனமான செயற்பாடுகளை எம்மீது பிரயோகிப்பதை உடன் நிறுத்திக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

இந்நிலை தொடருமாயின் அனைத்துப் பீடங்களையும் ஒன்றிணைத்து காலவரையறையற்ற போராட்டத்தில் குதிப்பதைத் தவிர எமக்கு வேறு வழியில்லை. எனவே சம்பந்தப்பட்டவர்கள் இதைக் கவனத்தில் எடுத்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

என்று அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி

யாழ். பல்கலைக்கழக விடுதியில் இராணுவப் புலனாய்வுப் பிரிவினர் சோதனை – மாணவர்கள் பதற்றத்தில்

Related Posts