தற்போது யாழ். கல்வியங்காட்டில் இயங்குகின்ற பலாலி ஆசிரியர் கலாசாலையை அதன் சொந்த இடத்தில் மீண்டும் இயங்கவைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளர் சுரேஸ் பிரேமச்சந்திரன் வலியுறுத்தினார்.
எனினும், இந்த விடயம் தேசிய கொள்கைக்கு உட்பட்டதாகையால் மத்திய அரசாங்கமே தீர்மானம் எடுக்க முடியும் எனவும் அதனை இங்கு கதைக்க முடியாது எனவும் இது தொடர்பாக கதைக்க வேண்டுமாயின் யாழ்ப்பாணத்திற்கு புதன்கிழமை (23) வருகை தரும் கல்வி அமைச்சர் பந்துல குணவர்த்தனவுடன் கலந்தாலோசிக்க வேண்டும் எனவும் பாரம்பரிய கைத்தொழில் மற்றும் சிறுகைத்தொழில் அபிவிருத்தி அமைச்சர் கே.என்.டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.
யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டம் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் மற்றும் டக்ளஸ் தேவானந்தாவின் இணைத் தலைமையில் யாழ். மாவட்டச் செயலகத்தில் நடைபெற்றது.
இதன்போதே சுரேஸ் பிரேமச்சந்திரன் மேற்படி கோரிக்கையை முன்வைத்தார்.
பலாலி ஆசிரியர் கலாசாலையை பழைய இடத்தில் இயங்குவது தொடர்பில் நடவடிக்கை எடுக்கவேண்டும். அதற்கான தீர்மானம் ஒன்றை இந்த ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டத்தில் மேற்கொள்ள வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.
இதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் மற்றும் வடமாகாண சபையின் அவைத் தலைவர் ஆகியோர் ஆதரவு தெரிவித்தனர்.
இதற்கு மறுப்புத் தெரிவித்த டக்ளஸ் தேவானந்தா, தேசிய கொள்கைக்கு அமைவாக செயற்பட வேண்டும் என தனது கருத்தை முன்வைத்தார்.
தொடர்ந்து காரசாரமான விவாவதங்கள் நடைபெற்ற போதும், டக்ளஸ் தேவானந்தா தனது கருத்திலிருந்து பின்நிற்காத நிலையில், ‘நீங்கள் மத்திய அரசின் அமைச்சர் ஆகையால் எப்பொழுதும் மத்திய அரசிற்காகச் செயற்படுவீர்கள்’ சுரேஸ் பிரேமச்சந்திரன் டக்ளஸைச் சாடினார்.
பலாலியில் இயங்கி வந்த பலாலி ஆசிரியர் கலாசாலை இராணுவத்தினர் அவ்விடத்தை உயர் பாதுகாப்பு வலயமாக மாற்றிய பின்னர் தற்போது கல்வியங்காட்டுப் பகுதியில் தற்காலிகமாக இயங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
தொடர்புடைய செய்தி
விக்கி – டக்ளஸ் இணைத் தலைமையில் தொடங்கியது ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டம்