நீதிமன்றில் முன்னிலையான கோட்டாபய!

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, 2019 ஆம் ஆண்டு இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளில் தன்னைக் கைது செய்வதையோ அல்லது தடுத்து வைப்பதையோ தடுக்குமாறு கோரி தாக்கல் செய்திருந்த எழுத்தாணை மனுவின் விசாரணை தொடர்பான வழக்கிற்கான மேன்முறையீட்டு நீதிமன்றில் முன்னிலையாகியுள்ளார்.

குறித்த மனு கடந்த ஜூலை 09ஆம் திகதி மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைவர் நீதியரசர் ரொஹாந்த அபேசூரிய மற்றும் நீதியரசர் சரத் திஸாநாயக்க ஆகியோர் அடங்கிய நீதிபதிகள் குழாம் முன்னிலையில் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன்போது, இந்த மனுவில் பிரதிவாதிகளாகக் குறிப்பிடப்பட்டுள்ள குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் (CID) முன்னாள் பணிப்பாளர் ஷானி அபேசேகர உள்ளிட்டோர் சார்பில் முன்னிலையான பிரதி சொலிசிட்டர் ஜெனரல் சுஹர்ஷி ஹேரத் தனது வாதங்களை முன்வைத்தார்.

ஷானி அபேசேகர மனுதாரருக்கு எதிராக வஞ்சகமான முறையில் அல்லது பழிவாங்கும் நோக்குடன் செயற்பட்டார் என்பதை உறுதிப்படுத்துவதற்கான எந்தவொரு சாட்சியங்களையும் மனுதாரரான கோட்டாபய ராஜபக்ச நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கவில்லை எனப் பிரதி சொலிசிட்டர் ஜெனரல் இதன்போது சுட்டிக்காட்டினார்.

அதன் மேலதிக விசாரணைகள் இன்றைய தினத்திற்கு ஒத்திவைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related Posts