நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட மோதலின் பின்னணியில் ஏதேனும் சதித்திட்டங்கள் அடங்கிய செயல்பாடுகள் காணப்பட்டதா என்பது குறித்து தற்போது விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக சுகாதார பிரதி அமைச்சர் வைத்தியர் ஹன்ஸக விஜேமுனி தெரிவித்துள்ளார்.

கண்டி மாவட்டத்தின் சுகாதார நடவடிக்கைகளை முன்னெடுத்துச் செல்வது தொடர்பில் நடைபெற்ற கலந்துரையாடலொன்றின் போது கருத்துத் தெரிவிக்கையிலேயே பிரதி அமைச்சர் இதனைக் குறிப்பிட்டார்.
பழைய போகம்பறை சிறைச்சாலை வளாகத்தினுள் நிறுவப்படும் புதிய சிறைச்சாலை மற்றும் காலி, மஹமோதர பழைய வைத்தியசாலையை புதிய சிறைச்சாலையாக மாற்றுவதற்கு அரசாங்கம் எடுத்த தீர்மானம் சில மாதங்களுக்கு மட்டுமேயானது என்றும் சுகாதார பிரதி அமைச்சர் வைத்தியர் ஹன்ஸக விஜேமுனி இங்கு சுட்டிக்காட்டினார்.
சிறைச்சாலைகளின் நெரிசலுக்கு அரசாங்கத்தின் தீர்வுகள் கிடைத்த பின்னர், அந்த இரண்டு சிறைச்சாலைகளும் நீக்கப்படும் என்றும் அவர் அங்கு சுட்டிக்காட்டினார்.
“நீர்கொழும்பு சிறைச்சாலை மோதலின் பின்னணியில் ஏதேனும் சதித்திட்டம் இருந்ததா? என்பது குறித்து தற்போது விசாரணைகள் நடத்தப்பட்டு வருகின்றன. அந்த விசாரணைகளின் முன்னேற்றத்தின் அடிப்படையிலேயே எம்மால் உறுதியாகக் கூற முடியும்.”
“சிறைச்சாலைகளில் உள்ள அதிக நெரிசல் நீண்டகாலமாக நிலவி வரும் ஒரு பிரச்சினையாகும். சிறைச்சாலைக்குள் பல பிரச்சினைகள் உருவாகின்றன. வழக்குகள் தேவையற்ற முறையில் தாமதமடைதல், அறிக்கைகள் கிடைக்காமை, போதைப்பொருள் கைதுகள் அதிகரிப்பு ஆகியன சிறைச்சாலை நெரிசல் அதிகரிப்பதற்கு காரணமாக அமைந்துள்ளன.”
“காலி மஹமோதர பழைய வைத்தியசாலை, கண்டி போகம்பறை சிறைச்சாலை ஆகிய இரண்டையும் நாங்கள் சிறைச்சாலைகளாக தொடர்ந்து முன்னெடுத்துச் செல்ல எதிர்பார்ப்பவை அல்ல. எமக்கு வேறு திட்டங்கள் உள்ளன. ஆனால் இந்த நேரத்தில் உடனடி நடவடிக்கையாக சில மாதங்களுக்கு மட்டுமே அந்தப் படியை எடுத்தோம்.”
“சில மாதங்களுக்கு மட்டுமே அந்த இடங்களில் சிறைச்சாலைகள் நடத்தப்படும். தீர்வுகள் கிடைக்கும் போது அந்த இரண்டு சிறைச்சாலைகளும் நீக்கப்படும்.”
இதேவேளை, பழைய போகம்பறை சிறைச்சாலை வளாகத்தினுள் புதிய சிறைச்சாலையொன்றை நிறுவுவது தொடர்பான விசேட வர்த்தமானி அறிவித்தல், நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாடு அமைச்சர் ஹர்ஷன நாணயக்காரவினால் கடந்த 8ஆம் திகதி வெளியிடப்பட்டிருந்தது.
காலி, மஹமோதர பகுதியில் புதிய சிறைச்சாலையொன்றை நிறுவுவது தொடர்பான வர்த்தமானி அறிவித்தலும் கடந்த 7ஆம் திகதி வெளியிடப்பட்டிருந்தது.