முன்னாள் அமைச்சர் ஜகத் புஷ்பகுமார கைது!!

தெங்கு அபிவிருத்தி மற்றும் பெருந்தோட்ட அபிவிருத்தி அமைச்சின் முன்னாள் அமைச்சரவை அமைச்சரான ஜகத் புஷ்பகுமார ஊழல் குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.

இன்று (08) காலை 9.20 மணியளவில் இலஞ்ச ஊழல் ஒழிப்பு விசாரணை ஆணைக்குழுவின் விசாரணை அதிகாரிகளால் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட ஜகத் புஷ்பகுமார கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.

ஜகத் புஷ்பகுமாரவுக்கு எதிராக சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் பின்வருமாறு:

(1) 2014 ஆம் ஆண்டு ஊவா மாகாண சபை தேர்தல் பிரகடனப்படுத்தப்பட்டிருந்த காலப்பகுதியில், அரசாங்கத்தின் அபிவிருத்தி திட்டங்கள் குறித்து மக்களுக்கு தெளிவுபடுத்துவதற்காக 250,000 சுவரொட்டிகள் மற்றும் துண்டுப்பிரசுரங்களை அச்சிடுமாறு சிலாபம் பெருந்தோட்ட நிறுவனம் மற்றும் குருநாகல் பெருந்தோட்ட நிறுவனத்திற்கு கட்டளையிட்டதன் மூலம், அதற்காக குறித்த இரு நிறுவனங்களுக்கும் 2,665,000/- ரூபா பணத்தை செலவிடச் செய்தமை.

(2) 2015 ஜனாதிபதி தேர்தல் காலப்பகுதியில், வெள்ள நிவாரணமாக வழங்குவதற்காக சாரம் மற்றும் டி-சேர்ட் (T-shirt) அடங்கிய 5,000 ஆடைத் தொகுதிகளையும், பாவாடை மற்றும் சட்டை அடங்கிய 5,000 ஆடைத் தொகுதிகளையும் முறையான நடைமுறையின்றி சிலாபம் பெருந்தோட்ட நிறுவனம் மற்றும் குருநாகல் பெருந்தோட்ட நிறுவனத்திடமிருந்து கொள்வனவு செய்ததன் ஊடாக, அந்த இரு நிறுவனங்களுக்கும் முறையே 3,275,000/- ரூபா மற்றும் 3,075,000/- ரூபா நஷ்டத்தை ஏற்படுத்தியமை மற்றும் அவற்றை பௌதிக ரீதியாக விநியோகிக்காமை.

(3) 2013 மற்றும் 2014 ஆம் ஆண்டுகளில் மே தின பேரணியில் கலந்துகொண்டவர்களுக்கு வழங்குவதற்காக, சிலாபம் பெருந்தோட்ட நிறுவனத்திடமிருந்து 2,000 டி-சேர்ட்டுகள் மற்றும் 1,500 சேலைகளையும், குருநாகல் பெருந்தோட்ட நிறுவனத்திடமிருந்து 2,000 டி-சேர்ட்டுகள் மற்றும் 1,500 சேலைகளையும் பெற்றுத்தருமாறு அதிகாரிகளை தூண்டியமை.

Related Posts