Ad Widget

அச்சுவேலி கைத்தொழிற்பேட்டை அடிக்கல் நாட்டும் நிகழ்வு திட்டமிட்டபடி நடைபெற்றது

அச்சுவேலி கைத்தொழிற்பேட்டைக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு திட்டமிட்டபடி நேற்று நடைபெற்றது. இந்திய தூதுவர் அசோக் கே. காந்தா கலந்து கொண்டு அடிக்கல்லை நாட்டி வைததார்.இந்திய அரசின் நன்கொடை நிதியில் அச்சுவேலி கைத்தொழிற்பேட்டையினை நிர்மாணம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டது.

எனினும் பாரம்பரிய கைத்தொழில் மற்றும் சிறுகைத்தொழில் அமைச்சு அச்சுவேலி கைத்தொழில் பேட்டைக்கான அடிக்கல்லை நாட்டும் நிகழ்வினை ஏற்பாடு செய்து இருந்தது.இதேவேளை அச்சுவேலி கைத்தொழிற்பேட்டை உட்கட்டமைப்பு தொடர்பாக இந்திய உயர்ஸ்தானிகராலயம் மற்றும் ஒப்பந்தகாரர்களுக்கிடையிலான ஒப்பந்தக் கைச்சாத்துக்கள் இந்திய தூதுவர் அசோக் கே.காந்தா, வடமாகாண ஆளுநர் ஜி.ஏ சந்திரசிறி அவர்களின் முன்னிலையில் இந்திய துணைத் தூதரகத்தில் இன்று கைச்சாத்திடப்பட்டன.

அச்சுவேலி கைத்தொழிற்பேட்டையின் முதல் நிலை புனரமைப்பானது 220 மில்லியன் ரூபாவில் இந்திய அரசின் நிதியுதவியுடன் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.இதன்படி இங்கு உட்புறச் சாலைகள், நீர்வழங்கல் அமைப்பு, சுத்திகரிப்பு ஆலை, மின்சாரம், கழிவுநீர் மற்றும் கழிவகற்றல் முறைமை உள்ளிட்ட கைத்தொழிற்பேட்டைக்குரிய அனைத்து உட்கட்டமைப்புக்களையும் சேர்த்து 6 ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டன.

இந்த நிகழ்வுகளில் இந்திய துணைத் தூதுவர் மகாலிங்கம், தமிழ் தேசிய கூட்டமைப்பின் யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன் மற்றும் பிரதேச சபைகளின் தவிசாளர்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.

Related Posts