பொத்துவில் முதல் பொலிகண்டி வரையான பேரணி குறித்து கொழும்பை தளமாகக் கொண்ட ஊடகங்கள் கவனம் செலுத்தாமை ஏன் என இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் அலெய்னா ரெப்லிட்ஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.
இந்த விடயம் குறித்து தனது ருவிட்டரில் பதிவிட்டுள்ள அவர், “அமைதிவழிப் போராட்டம் என்பது அடிப்படை ஜனநாயக உரிமைகளில் ஒன்றாகும். இவ்வாறான அமைதிவழிப் போராட்டங்களுக்கு செவிசாய்க்க வேண்டும். அவர்களின் கவலைகள் குறித்து அவதானம் செலுத்த வேண்டும்.
பொத்துவில் முதல் பொலிகண்டி வரையான பேரணி குறித்து தமிழ் ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தமையை அவதானித்தேன். ஆனால் கொழும்பைத் தளமாகக் கொண்ட ஊடகங்கள் இது குறித்து ஏன் கவனம் செலுத்தவில்லை?” என பதிவிட்டுள்ளார்.
வடக்கு கிழக்கில் உள்ள தமிழர்கள் கடந்த வாரம் பொத்துவில் முதல் பொலிகண்டி வரை பாரிய போராட்டத்தை நடத்தினர்.
இந்த நிலையில், போராட்டக்காரர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது என்று சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சர் சரத் வீரசேகர கூறினார்.
தனியார் தொலைக்காட்சி ஒன்றில் பேசிய அவர், போராட்டக்காரர்கள் பயன்படுத்திய வாகனங்களும் பறிமுதல் செய்யப்படும் எனவும் தெரிவித்தார்.
அதேவேளை, போராட்டத்தில் பங்கேற்ற பின்னர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனின் விசேட அதிரடிப்படையினரை திரும்பப் பெறுமாறு அமைச்சர் ஏற்கனவே உத்தரவிட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
#Peacefulprotest is an important right in any #democracy and significant, legitimate concerns should be heard. I saw Tamil media coverage of the march from Pottuvil to Point Pedro and wondered why it was not more widely covered by Colombo-based media?
— Ambassador Teplitz (@USAmbSLM) February 9, 2021