யாழ்.மாநகரசபை விவகாரங்களை கவனிப்பதற்காக வடமாகாண ஆளுநா் ஓய்வுபெற்ற கேணல் தர இராணுவ அதிகாாி ஒருவரை நியமித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
இது குறித்து யாழ்.மாநகரசபை உறுப்பினா் வ.பாா்த்தீபன் ஊடகங்களுக்கு தகவல் தருகையில், பல அனுபவம் வாய்ந்த கல்விபுலமை சார் தொழில் சார் அனுபவம் வாய்ந்த கல்வியாளர்கள் இங்கேயே வாழுகின்ற நிலையில் ஒரு பெருபான்மைய இனத்தவரினை ஒரு இராணுவ அதிகாரியினை யாழ்.மாநகர சபைக்கான ஆளுநரின் இணைப்பாளராக நியமிக்க வேண்டிய என்ன தேவை எழுந்துள்ளது.
யாழ்.மாநகர சபையினுடையதும் அதன் ஆளுகைக்குப்பட்ட மக்களினதும் அடிப்படைத் தன்மைகள் மற்றும் அவர்களது பிரச்சனைகளை நன்கு அறிந்த, இம் மக்களோடையே வாழுகின்ற பல அனுபவம் வாய்ந்த நிர்வாக சேவையாளர்கள் இக்கின்றபோது அவர்களினைக் கருத்திற்கொள்ளாமல் எங்கேயோ ஒரு இடத்தில் வாழுகின்ற எமது பிரதேசம் அதன் மக்களின் தன்மைகள் எதுவும் அறியதா ஒரு ஓய்வு பெற்ற இராணுவ கேணல் தர அதிகாரியை நியமிக்க இருப்பதன் சூட்சமம் தான் என்ன? யாழ்.மாநகர சபை நிர்வாகத்தின் நடைமுறைகளில் ஒரு சில விடயங்களுக்கு மட்டுமே ஆளுநர்களின் அனுமதிக்காக செல்லவேண்டிய நிலையுள்ளது. ஆனால் இவ் இணைப்பாளரின் நியமனமானது எதிர்வரும் காலங்களில் யாழ்.மாநகர சபை முன்னெடுக்கின்ற எல்லா நடவடிக்கைகளுக்கும் செயற்றிட்டங்களுக்கும் ஆளுநரின் அனுமதியை பெறவேண்டும் என்ற நிலையை உருவாக்குவதற்கான அதாவது எம்மிடம் உள்ள அற்ப சொற்ப அதிகாரங்களையும் பறித்தெடுகின்ற செயலுக்கான ஆரம்பபுள்ளியா என்று எண்ணவும் தோன்றுகின்றது.
யாழ்.மாநகர சபைக்கான இணைப்பாளராக ஒரு ஓய்வு பெற்ற கேணல் தர இராணுவ அதிகாரியினை நியமிக்க இருக்கின்ற இச் செயல் நடைபெறுமாயின் அது மிகவும் கண்டனத்திற்குரியது.
இவ்வாறு அவர் தனது கருத்தினை தெரிவித்துள்ளார்.